ஹெல்மெட் போடலையா விட்ருங்க அப்புறம் பாத்துக்கலாம்.. அடடே முதல்வர்!
மும்பை: ஹெல்மட் அணியாமல் பைக் ஓட்டுறாங்களா விட்டுருங்க, நடு ரோட்டுல அவங்கள நிறுத்த வேண்டாம், பின்னாடி பார்த்துக்கலாம் என்று முதல்வர் சொல்லியிருக்கார். அப்படி கூறியது தமிழ்நாட்டு முதலமைச்சர் இல்லை நண்பர்களே மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்.
நாடு முழுவதும் இருசக்கர வாகனம் ஓட்டுவோரை ஹெல்மட் அணிய வைக்க மாநில அரசுகள் படாத பாடு பட்டு வருகிறது. நீதிமன்றங்கள் பலமுறை தானாக முன்வந்தும், பொதுநல வழக்குகள் மூலமும் மாநில அரசுகளுக்கு ஹெல்மட் அணியாமல் செல்வோர் குறித்து கவலை தெரிவித்துள்ளது. அதே வேளையில் ஹெல்மட் அணிய வற்புறுத்துவது இரு சக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் கவனிக்க வேண்டிய, உடனடியாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள் ஏராளம், ஏராளம் இருக்க ஹெல்மட் அணியாமல் செல்வோரை ஏதோ கொலைக் குற்றம் செய்தோரைப் போல போலீசார் நடுரோட்டில் விரட்டி விரட்டி பிடிப்பதுவும், நடந்து செல்லவே முடியாத அளவில் மோசமான சாலைகளை வைத்திருப்பதுவும் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் இருவருமே ஹெல்மட் அணிய வேண்டும் என்பது சென்னை உட்பட மாநிலம் முழுவதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
மாயமான மேஜிக் நிபுணர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு.. சோகத்தில் முடிந்த சாகசம்!
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணியாதவர்களை நடுரோட்டில் தடுத்து நிறுத்த வேண்டாம் என மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். அவர்களின் பயணத்தை தடுத்து நிறுத்தாமல் போக்குவரத்து விதிகளையும், சட்டத்தையும் மீறி செல்வோரை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து, அவர்களது வீட்டிற்கு போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பான சம்மனை அனுப்பலாம் என்றும் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். இது குறித்து போக்குவரத்து காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ள அவர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர் நடுரோட்டில் நிறுத்தப்படக் கூடாது என கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிராவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள இந்த முறை மூலம் நகரம் முழுக்க போக்குவரத்து காவல் துறையினர் நிறுவி இருக்கும் சி.சி.டி.வி. கேமராக்களை கொண்டு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோரை மிக எளிமையாக கண்டறிந்து விட முடியும். பின்னர் ஹெல்மட் அணியாமல் செல்வோரின் புகைப்படங்களை கொண்டு இ-செல்லான் உருவாக்கி, அவரவர் வீடுகளுக்கு அனுப்ப முடியும்.
வீட்டிற்கு வரும் குறிப்பாணைகளுக்கு, விதிகளை மீறியவர்கள் ஆன்லைன் மூலமாகவும் பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில் தொடர்ந்து விதிகளை மீறி செல்வோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு மிகப்பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும். அபராதம் செலுத்தாதவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசார் லஞ்சம் வாங்குவதும் குறையும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.