சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வர் என சொன்னபோது ஏன்மறுக்கவில்லை? அமித்ஷாவுக்கு சஞ்சய் ராவத் கேள்வி
மும்பை: மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தின் போது சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர் என கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதை அப்போது ஏன் யாரும் மறுக்கவில்லை என்று பாஜக தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் சஞ்சய் ராவத்.
மகாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கூட்டணி முறிந்துவிட்டது. தற்போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில் மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து நேற்று பேட்டியளித்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமரும் தாமும் பலமுறை பட்னாவிஸ்தான் என அடுத்த முதல்வர் என பேசினோம். அப்போது சிவசேனா ஏன் இதை மறுக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு இன்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக இந்தியா டுடேவிடம் சஞ்சய் ராவத் கூறுகையில், தேர்தல் பிரசாரத்தின் போது சிவசேனாவை சேர்ந்தவரே முதல்வர் என உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். அப்போது பாஜக இதை ஏன் மறுக்கவில்லை?
பிரதமர் மோடி மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். மகாராஷ்டிராவில் சமமான அதிகாரப் பகிர்வு என பேசி முடித்த விவரத்தை மோடியிடம் அமித்ஷா தெரிவிக்கவில்லை என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது என கூறியுள்ளார்.