மகாராஷ்டிராவில் ஸ்டார்ட்.. உத்தவ் தாக்ரேவை கலாய்க்கும் துணை முதல்வர் அஜித் பவார்! ட்வீட்டை பாருங்க
மும்பை: ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு தலைமீது கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. துணை முதல்வர் சச்சின் பைலட் தலைமையிலான குழுவின் கலகக் குரல்தான் இந்த நிலைமைக்கு காரணம்.
மறுபக்கம், மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவை துணை முதல்வர் அஜித் பவார் கிண்டல் செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது.
பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் சமீபத்தில் ஒரு கமென்ட் அடித்து இருந்தார். மகாராஷ்டிரா கூட்டணி அரசு ஆட்டோ ரிக்ஷா போல பயணித்துக் கொண்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அது கவிழும் என்று தெரிவித்திருந்தார்.
பூமி பூஜை...ராமரின் தாய் கவுசல்யா பிறந்த மண்ணை சுமந்து...800 கி.மீ. நடந்தே செல்லும் இஸ்லாமியர்
சீக்கிரம் கலைக்க வேலையை ஆரம்பியுங்கள்
இதனால் கடும் கோபம் அடைந்தார் முதல்வர் உத்தவ் தாக்கரே. அவர் கூறுகையில், எதற்காக செப்டம்பர், அக்டோபர் மாதம் வரை காத்திருக்கிறீர்கள். இப்போதே மகாராஷ்டிரா அரசை கலைப்பதற்கான முயற்சிகளைத் தொடங்குங்கள். ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுவதன் மூலமாக சிலர் மகிழ்ச்சி அடைவார்கள். சிலர் அழிவுகளை செய்து மகிழ்ந்திருப்பர். உங்களுக்கு அழிவு பாதையில்தான் மகிழ்ச்சி என்றால் அதை செய்யுங்கள், என்று காட்டமாக பாஜகவுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
ஓட்டுவது நான்தான்
மேலும் அவர் ஸ்டீயரிங் பற்றி ஒரு உதாரணம் தெரிவித்திருந்தார். எனது கட்சியின் எதிர்காலம் எதிர்க்கட்சியின் கையில் கிடையாது. ஆட்சியின் ஸ்டீயரிங் எனது கையில் இருக்கிறது. இது ஒரு ஆட்டோ ரிக்ஷா அரசு என்று எதிர்க்கட்சி கிண்டல் செய்கிறது. ஆனால் ஆட்டோ ரிக்ஷா என்பது ஏழைகளுக்கான வாகனம். இந்த வாகனத்தை நான் ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். மற்ற இருவரும் பின் சீட்டில் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வமான பத்திரிக்கை சாம்னாவில் உத்தவ் தாக்கரே தெரிவித்திருந்தார்.
சீண்டல்
இந்த நிலையில்தான், 60வது பிறந்த நாளை கொண்டாடும் உத்தவ் தாக்கரேவுக்கு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவார் ட்விட்டரில் ஒரு வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார். அதில், கோல்ப் மைதானத்தில் ஒரு குட்டி கார் வாகனத்தில் உத்தவ் தாக்ரே மற்றும் அஜித் பவார் பயணம் செய்வது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதில் வாகனத்தின் ஸ்டீயரிங் அஜித் பவாரால், பிடிக்கப்பட்டுள்ளது போன்ற காட்சி உள்ளது.
ஸ்டீயரிங் எதற்கு?
இதனால் சிவசேனா கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எதற்காக ஸ்டீயரிங் நீங்கள் பிடித்து இருப்பது போன்ற புகைப்படத்தை இந்த நேரத்தில் வெளியிட்டுள்ளீர்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். அரசின் கட்டுப்பாடு தேசியவாத காங்கிரஸ் கட்சி கைகளில்தான் இருக்கிறது என்பதை அஜித் பவார் மறைமுகமாக தெரிவிக்கும் வகையில் இந்தப் படத்தை வெளியிட்டு உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும் இதை மறுத்துள்ள அந்த கட்சி இது சாதாரண பிறந்தநாள் வாழ்த்துதான் என்று கூறியுள்ளது.
துணை முதல்வர்களால் தொல்லை
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியை அமைக்கும் முன்பாக, பாஜகவுடன் அஜித் பவார் இணக்கமானார். கூட்டணி ஆட்சி அமைக்க முற்பட்டார். ஆனால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து நல்ல பிள்ளையாக கலகத்தை கைவிட்டு திரும்பினார். அஜித் பவாருக்கு, இந்த கூட்டணி ஆட்சியில், துணை முதல்வர் பதவி தரப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இவ்வாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் துணை முதல்வரால், முதல்வருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிராவிலும் இதே மாதிரி நிலை உருவாகியுள்ளதை, பாஜக உன்னிப்பாக கவனிப்பதாக கூறப்படுகிறது.