உத்தவ் தாக்கரே பதவி விலகுவதை தவிர வேற வாய்ப்பே இல்லை ராஜா.. ஏக்நாத் ஷிண்டே கையில் 49 எம்.எல்.ஏக்கள்!
மும்பை/குவஹாத்தி: மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே பதவி விலக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா -தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணிக்கு சிவசேனா கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சிவசேனாவின் மூத்த தலைவரும் அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தரும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முதலில் பாஜக ஆளும் குஜராத்திலும் பின்னர் பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலத்திலும் முகாமிட்டுள்ளனர்.
இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரே பதவிக்கு கடும் நெருகக்டி ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவியில் இருந்து தாம் விலக தயார் என்றும் ராஜினாமா கடிதம் தயாராக உள்ளது என்றும் கூறிய உத்தவ் தாக்கரே, மும்பை முதல்வர் இல்லத்தை காலி செய்திருந்தார். ஆனால் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என தெரிவித்திருந்தார்.
”பாகிஸ்தானை” வீழ்த்திய “தேசிய கட்சி” நமக்கு உதவும் - சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களிடம் ஏக்நாத் உறுதி
இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே அணியில் இணையும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் சிவசேனா கட்சியின் 40 எம்.எல்.ஏக்கள், ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்திருக்கின்றனர். மேலும் 9 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் ஏக்நாத் ஷிண்டே முகாமில் இணைந்துள்ளனர். மொத்தம் 49 எம்.எல்.ஏக்கள் ஆதரவு, ஷிண்டேவுக்கு உள்ளது.
இதனிடையே அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று துணை சபாநாயகருக்கு உத்தவ் தாக்கரே கடிதம் அனுப்பினார். ஆனால் தங்களது பக்கமே அதிக எம்.எல்.ஏக்கள் இருப்பதால் தாங்களே உண்மையான சிவசேனா என்று ஏக்நாத் ஷிண்டே தரப்பு கூறி வருகிறது. மேலும் சக்தி வாய்ந்த தேசிய கட்சி, தங்களது முடிவை வரவேற்பதாகவும் ஏக்நாத் ஷிண்டே கூறியிருந்தார். இதன் மூலம் பாஜகவுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு புதிய ஆட்சி அமைக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.