மகாராஷ்டிரா தேர்தல்: தனிப்பெரும்பான்மை பெற பாஜக படுதீவிரம்... கை கொடுக்குமா கட்சி தாவல்கள்?
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதில் படுதீவிரமாக இருக்கிறது பாஜக.
மகாராஷ்டிராவின் 288 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் அக்டோபர் 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இங்கு தற்போது பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் 2014 சட்டசபை தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் தனித்தே போட்டியிட்டன. அப்போது 260 இடங்களில் போட்டியிட்ட பாஜக 122 இடங்களைப் பெற்றது பாஜக. 282 தொகுதிகளில் போட்டியிட்ட சிவசேனா 63 இடங்களில் வென்றது.
திமுக- காங். கூட்டணியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் நாங்குநேரி இடைத்தேர்தல்!
பாஜக-சிவசேனா கூட்டணி அரசு
15 ஆண்டுகாலம் மகாராஷ்டிராவை ஆண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 42, 41 இடங்கள்தான் கிடைத்தன. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. இதனால் பாஜகவும் சிவசேனாவும் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன.
பாஜக புது வியூகம்
ஆனால் தற்போது தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதில் பாஜக படுதீவிரமாக இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் பாஜக-சிவசேனா இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் 288 தொகுதிகளை சரிபாதியாக பிரித்துக் கொள்வது என இரு கட்சிகளிடையே முடிவு எட்டப்பட்டது. தற்போது பாஜக இம்முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறது. தமது கட்சி 165 இடங்களிலும் சிவசேனாவுக்கு 123 இடங்களையும் ஒதுக்குவதாக கூறி வருகிறது.
சிவசேனாவுக்கு து.மு.பதவி
இதனால் இரு கட்சிகளிடையே கூட்டணி ஏற்படுமா? என்கிற கேள்விக்குறியும் எழுந்தது. அதேநேரத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால் சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி தருவதாக வாக்குறுதியும் தரப்பட்டுள்ளதாம். இதனால் பாஜக-சிவசேனா தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிவடையும் என்றே தெரிகிறது.
145 இடங்கள் இலக்கு
மற்றொருபுறம் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 இடங்களில் போட்டியிடுகின்றன. எஞ்சிய 38 இடங்களை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கியுள்ளன. ஒருவேளை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து பெரும்பான்மைக்குரிய 145 இடங்களைப் பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான் என்கிற நிலை. இதனை கணக்கில் கொண்டே தற்போது பாஜக 165 தொகுதிகளில் போட்டியிட்டு எப்படியாவது 145 இடங்களைக் கைப்பற்றி தனித்தே ஆட்சி அமைப்பது என்பதில் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
கை கொடுக்கும் கட்சி தாவல்கள்?
குறிப்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தூண்களாக இருந்த முதுபெரும் தலைவர்கள் தொடர்ந்து பாஜகவுக்கு தாவி வருவது தங்களுக்கு பெரும் பலம் என நம்புகிறது பாஜக. இதன்மூலம் தங்களது தனித்தே ஆட்சி கனவு நிறைவேறும் என காத்திருக்கிறது பாஜக.