மகா. முன்னாள் முதல்வர் அசோக் சவாணுக்கு கொரோனா பாதிப்பு
மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் தற்போதைய பொதுப்பணித் துறை அமைச்சருமான அசோக் சவாணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு அதிகம். மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 3,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதனால் மகாராஷ்டிராவில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. இங்கு கொரோனாவால் மொத்தம் 50,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,635.
மகாராஷ்டிராவில் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திரா ஆவாத் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது ஜிதேந்திரா நலமடைந்துள்ளார்.
கொரோனா பாதிப்பு- உலக நாடுகளில் ஈரானை பின்தள்ளி 10-வது இடத்தில் இந்தியா
இந்நிலையில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான அசோக் சவாணுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மும்பையில் இருந்து சொந்த தொகுதியான மராத்வாடாவுக்கு அசோக் சவாண் அடிக்கடி பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதனால் அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அசோக் சவாண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.