மும்பையில் சரத்பவாருடன் 3 காங். தலைவர்கள் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை: என்சிபி நவாப் மாலிக்
மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் (என்சிபி) சரத்பவாரை இன்று மாலை 5 மணிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேசி வேணுகோபால் ஆகியோர் சந்தித்து பேசுகின்றனர்; இச்சந்திப்புக்குப் பின்னர் ஆட்சி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என என்சிபி மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த ஆளுநர் கோஷ்யாரி பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.
இத்தகவல்கள் வெளியான நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் கூறியதாவது:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் 54 எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர். அதில் மாநிலத்தில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் ஆட்சி அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் கட்சித் தலைவர் சரத்பவாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சரத்பவார் தலைமையில் இதற்கான குழுவும் அமைக்கப்படும்.
ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் நேற்று அழைப்பு விடுத்திருந்தார். மேலும் இன்று இரவு 8.30 மணி வரை ஆட்சி அமைக்க அவகாசமும் கொடுத்திருக்கிறார். மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேல், மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேசி வேணுகோபால் ஆகியோர் மும்பை வந்து சரத்பவாரை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்க உள்ளனர்.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் ஆட்சி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ், என்சிபி, சிவசேனா மூன்றும் இணையாமல் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என நாங்கள் நம்புகிறோம். இந்த மூன்று கட்சிகளும் இணையாமல் போனால் மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை.
இவ்வாறு நவாப் மாலிக் கூறினார்.