மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா... மாலை 5 மணி டூ காலை 5 மணி வரை ஊரடங்கு... மகாராஷ்டிரா பரிசீலனை!
மும்பை: கொரோனா பாதிப்பு அதிகரிப்பு தொடர்ந்தால் மகாராஷ்டிராவில் மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
கொரோனா விதிமுறைகளை மீறி திருமண விழாக்களில் 50-க்கும் மேற்பட்டோர்களை அனுமதிக்கும் அரங்குகளை ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் முறையை பரிசீலித்து வருவதாக அமைச்சர் விஜய் வதேட்டிவார் கூறினார்.
மகாராஷ்டிராவின் நாகபூர், விதர்பா உள்ளிட்ட பகுதிகளில் தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்தியாவில் 14,264 பேருக்கு கொரோனா... கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களால் சற்று அதிகரிக்கும் பாதிப்பு!
சில மாநிலங்களில் ஆட்டம்
உலகம் முழுவதும் கொரோனா ஆட்டம் காட்டி வந்தாலும் இந்தியாவில் ஆறுதல் அளிக்கும் படியாக ஓரளவு தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனாவை பெருமளவு குறைத்து விட்டன. ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அடங்க மறுக்கிறது. கேரளாவில் தினமும் 5,000-க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவில் திடீர் அதிகரிப்பு
மகாராஷ்டிராவில் இடையில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அங்கு தற்போது 3 மாதங்களுக்கு பிறகு 6,000-க்கும் மேல் பாதிப்புகள் பதிவாகி கொரோனா மீண்டும் வேகம் எடுத்துள்ளது. நாகபூர், விதர்பா உள்ளிட்ட பகுதிகளில் தினசரி பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் பல கட்டுப்பாடுகளை மகாராஷ்டிரா அரசு கையில் எடுத்துள்ளது. அமராவதி, வர்தா மற்றும் யவத்மால் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்
மும்பையில் கொரோனா விதிகளை மீறும் கட்டிடங்கள் அதிரடியாக சீல் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா முழுவதும் மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிது.இது தொடர்பாக மகாராஷ்டிரா நிவாரண மற்றும் மறுவாழ்வு அமைச்சர் விஜய் வதேட்டிவார் கூறியதாவது:-
மக்கள்தான் காரணம்
தனிநபர் இடைவெளி, மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை பெரும்பான்மையான மக்கள் மறந்ததால்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் தொற்று அதிகமாகியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு தொடர்ந்தால் மாநிலத்தில் மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது. முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் அடுத்த வாரம் மும்பையில் நடைபெற உள்ள கூட்டத்தில் இந்த முடிவு இறுதி செய்யப்பட உள்ளது.
ரூ.1 லட்சம் அபராதம்
கொரோனா விதிமுறைகளை மீறி திருமண விழாக்களில் 50-க்கும் மேற்பட்டோர்களை அனுமதிக்கும் அரங்குகளை ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் முறையை பரிசீலித்து வருகிறோம். உள்ளாட்சி அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் உட்பட மாவட்ட நிர்வாகங்களை தங்கள் பகுதிகளில் உள்ள நிலைமைகளைப் பொறுத்து இரவு நேர ஊரடங்ககை அமல்படுத்த கேட்டுக்கொள்வோம். ஊரடங்கு உத்தரவின் போது, திருமண அரங்குகள், சந்தைகள், தியேட்டர்கள் என கூட்டம் கூடும் அனைத்து இடங்களும் மூடப்படும் என்று விஜய் வதேட்டிவார் கூறினார்.