என்னாது கொரோனாவுக்கு மருந்தா?ராம்தேவ் அண்ட் கோவுக்கு மகாராஷ்டிரா, ராஜஸ்தான் அரசுகள் கடும் எச்சரிக்கை
மும்பை/ஜெய்ப்பூர்: கொரோனா மருந்து என்று யோகா வகுப்பு நடத்தும் ராம்தேவ் ஏதேனும் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் அரசுகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கொரோனாவுக்கு தாம் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தார் யோகா வகுப்பு நடத்துகிற ராம்தேவ். அவரது பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கான மருந்துக்கு கொரோனில் எனவும் பெயர் வைத்தது.
கொரோனாவை கட்டுப்படுத்த மதுரையில் தீவிரம்- நடமாடும் முகாம்கள்... வீட்டுக்கு வீடு பரிசோதனை
உத்தரகாண்ட் அரசு அதிரடி
ஆனால் மத்திய அரசோ, கொரோனாவுக்கு மருந்து என விளம்பரம் செய்ய தடை விதித்தது. அதேபோல உத்தரகாண்ட் மாநில அரசும், சளி- காய்ச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து என்றுதானே லைசென்ஸ் கொடுத்தோம் என உண்மையை போட்டுடைத்தது.
கைது செய்ய கோரிக்கை
இதனையடுத்து ராம்தேவ் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள கோரி பீகாரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ராம்தேவை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். ராம்தேவ் மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.
ராம்தேவுக்கு எச்சரிக்கை
இந்த நிலையில் ராம்தேவ் விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியதாவது: மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சரவை ஒப்புதல் தராமல் கொரோனாவுக்கு மருந்து என ராம்தேவ் விளம்பரம் செய்யக் கூடாது. இதனையும் மீறி ராம்தேவின் கம்பெனி விளம்பரம் செய்தால் சட்ட நடவடிக்கைகள் பாயும். இவ்வாறு அனில் தேஷ்முக் கூறினார்.
சோதனைக்கு அனுமதி பெறவில்லை
இதேபோல் ராஜஸ்தான் அரசும் ராம்தேவ் அண்ட் கோவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இது தொடர்பாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் ரகு ஷர்மா கூறியதாவது: கொரோனா மருந்து தொடர்பாக ஆய்வு நடத்த மாநில அரசிடம் ராம்தேவ் எந்த அனுமதியையும் பெறவில்லை. மனிதர்களிடம் மருந்துகளை கொடுத்து சோதனை நடத்துவதற்கு அரசின் அனுமதி கட்டாயம் தேவை. அப்படி அனுமதி இல்லாமல் சோதனை மேற்கொண்டால் கடும் நடவடிக்கை பாயும்.
ராம்தேவுக்கு ராஜஸ்தானும் வார்னிங்
ஆயுர்வேத மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியவைதான். ஆனால் கொரோனாவுக்கும் மருந்துதான் என்பதை ஆயுஷ் அமைச்சகம்தான் உறுதி செய்ய வேண்டும். இப்படி எந்த ஒரு அனுமதி இல்லாமலேயே கொரோனாவுக்கு இதுதான் மருந்து என்று ராம்தேவ் உட்பட யார் விற்பனை செய்தாலும் நடவடிக்கைகள் பாயும் என்றார்.