வறட்சியின் கோரப் பிடியில் சிக்கி தவிக்கும் மகாராஷ்டிரா.. செயற்கை மழையை உருவாக்க தீவிர முயற்சி
மும்பை: மராட்டிய மாநிலத்தில் நிலவி வரும் கடும் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டையடுத்து வறட்சி கோர தாண்டவமாடும் சில பகுதிகளில், செயற்கை மழையை பெய்ய வைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டிலுள்ள பெரும்பான்மையான மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவ மழை பொய்த்து வருகிறது. கடந்த ஆண்டிலும் தமிழகம், மஹாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் பருவமழை சரியாக பெய்யவில்லை.
இதனால் பல மாநிலங்களில் வரலாறு காணாத வறட்சி நிலவி, கடும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. வறட்சியை சமாளிக்க பல்வேறு திட்டங்களை யோசித்து அந்தந்த மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள விதர்பா மற்றும் மராத்வாடா உள்ளிட்ட பகுதிகள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்குண்டு தவித்து வருகின்றன.
வானிலை மையம் எச்சரிக்கை
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆண்டு பருவமழை தாமதமாகவே துவங்கும் என்றும், மழை பெய்தாலும் இம்மாநிலத்தில் குறைவான அளவு மழையே பதிவாகும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வானிலை மையத்தின் எச்சரிக்கையை அடுத்து செயற்கை மழையை பெய்விக்க வைக்க முயற்சிக்கும் எண்ணத்தில் மராட்டிய மாநில அரசு உள்ளது.
அரசின் திட்டம் என்ன
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அம்மாநிலத்தை சேர்ந்த நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறை செயலாளர், வானிலை மையத்தின் எச்சரிக்கையை அடுத்து நடப்பாண்டு மழை பற்றாக்குறையை சமாளிக்க, செயற்கை மழை பெய்விக்கலாம் என அரசு முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். மேகமூட்டம் உள்ள அதே சமயத்தில், மழை பெய்யாத விதர்பா மற்றும் மராத்வாடா பகுதிகளில் இந்நடவடிக்கையை செயல்படுத்த உள்ளதாக குறிப்பிட்டார்.
விமானம் மூலம் உருவாக்க முடிவு
மேலும் தகவல் தெரிவித்த அவர் அவுரங்காபாத்திலுள்ள ஜெயக்வாடி மற்றும் சோலாப்பூரில் உள்ள உஜ்னி போன்ற அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார். மராட்டிய மாநிலத்தில் செயற்கை மழையை உருவாக்க விமானங்கள் பயன்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது, மழை மேகத்தை உருவாக்கும் பகுதிக்கான மாதிரியை எடுக்கவும், மழை மேகம் உருவாக்கும் பணியை மேற்கொள்வதற்கும். விமானம் பயன்படுத்தப்பட உள்ளது
புவி அறிவியல் அமைச்சகம் வழிகாட்டுதல்
புவி அறிவியல் அமைச்சகம் சார்பாகவே நாட்டில் செயற்கை மழை பெய்ய வைக்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இந்திய தட்பவெப்ப நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, சோலாபூர் மற்றும் உஜ்னியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. செயற்கை மழை என்பது குறிப்பிட்ட பகுதியை ஆய்வின் மூலம் தேர்வு செய்து, அங்கு விமானத்தின் மூலம் வளி மண்டலத்தில் எரியும் தன்மையுடன் கூடிய புரோபேன் கியாஸ் மூலம் அயோடின் துகள்கள் தூவப்படும். இவை நீராவியை உருவாக்கும். பின்னர் அவை நீர்துகள்களாக மாறி மழை பொழியும். சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இது போன்ற செயற்கை மழை திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் வெற்றி பெற்றால் வறட்சி நிலவும் மற்ற பகுதிகளிலும் செயல்படுத்தப்பட வாய்ப்பு ஏற்படும்