மகாராஷ்டிரா எம்.எல்.சி. தேர்தல்- பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு- ஆட்டத்தை ஆட தயாராகும் காங்.
மும்பை: மகாராஷ்டிரா எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் 4 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனை முன்வைத்து பாஜக அதிருப்தியாளர்களுக்கு எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சீட் வழங்கலாம் என்பதால் அம்மாநில அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா முதல்வரான உத்தவ் தாக்கரே பதவி ஏற்ற போது எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி. பதவி வகிக்கவில்லை. அவர் பதவி ஏற்ற 6 மாதங்களுக்குள் (மே 27-ந் தேதிக்குள்) எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி. யாக தேர்வாக வேண்டும்.
மகாராஷ்டிராவில் மார்ச் மாதம் எம்.எல்.சி. தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது. இந்த நிலையில் உத்தவ் தாக்கரே எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி. ஆகாத நிலையில் அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் முதல்வராக பதவி ஏற்றாக வேண்டும் என்கிற நெருக்கடி ஏற்பட்டது.
வைரசோடு வாழ மக்கள் பழகிக் கொள்ள வேண்டும்.. வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை.. மத்திய சுகாதாரத்துறை
அமைச்சரவை பரிந்துரை
இதனால் மகாராஷ்டிரா சட்ட மேலவையான எம்.எல்.சி.க்கு உத்தவ் தாக்கரேவை நியமன எம்.எல்.சி.யாக ஆளுநர் நியமிக்க வேண்டும் என்று அம்மாநில அமைச்சரவை பரிந்துரைத்தது. ஆனாலும் ஆளுநர் கோஷ்யாரி இதை கண்டுகொள்ளவில்லை. இதனால் பிரதமர் மோடியை தொடர்பு கொண்ட உத்தவ் தாக்கரே, அரசியல் சாசன நெருக்கடி குறித்து விவரித்தார். இதனையடுத்து உடனடியாகா எம்.எல்.சி. தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை ஆளுநர் கோஷ்யாரி கேட்டுக் கொண்டார்.
மே 21-ல் எம்.எல்.சி. தேர்தல்
இதனை தேர்தல் ஆணையம் ஏற்று வரும் 21-ந் தேதி எம்.எல்.சி. தேர்தல் நடைபெறும் என அறிவித்திருக்கிறது. சிவசேனாவின் சார்பில் உத்தவ் தாக்கரே மற்றும் நீலம் கோரே ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நீலம் கோரே மீண்டும் எம்.எல்.சி.யாகிறார்.
4 பாஜக வேட்பாளர்கள்
இந்த நிலையில் பாஜக இன்று தமது 4 வேட்பாளர்களை அறிவித்தது. பாஜகவின் நாக்பூர் தலைவர் பிரவின் தட்கே, கோபிசந்த் பாதல்கர், அஜித் கோப்சதே மற்றும் ரஞ்சித்சிங் மொகித் பாட்டீல் ஆகியோர் பாஜகவின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே பாஜகவின் அதிருப்தி தலைவரான ஏக்நாத் கட்சே, எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிட விரும்பியிருந்தார். ஆனால் அவரது பெயர் இன்றைய பட்டியலில் இடம்பெறவில்லை.
காங். ஆட்டம் ஆரம்பம்
இதனை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்துள்ளதாக மும்பை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது பாஜகவின் அதிருப்தி தலைவரான ஏக்நாத் கட்சே அல்லது பங்கஜா முண்டே இருவரில் ஒருவரை தங்களது கோட்டாவில் எம்.எல்.சி. வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் பாஜகவில் குழப்பம் உருவாகும் என்பது காங்கிரஸின் நிலைப்பாடு.