தேர்தலில் போட்டியே போடலைன்னாலும் பெரிய இழப்பு ராஜ்தாக்ரேவுக்குதான்.. ஆச்சரியமா இருக்குல்ல!
மும்பை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் ரிசல்ட்டால், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, கண்டிப்பாக ராகுல் காந்தியைவிட சோகமான நிலையில்தான் இருப்பார் என்கிறார்கள் தகவல் அறிந்தவர்கள். இத்தனைக்கும் இவர் கட்சி தேர்தலிலே போட்டியிடவில்லை என்பதுதான் சுவாரசிய தகவல்.
மகாராஷ்டிராவில், பாஜக மற்றும் சிவசேனா ஒரு, கூட்டணியாகவும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள்,மற்றொரு கூட்டணியாகவும், களம் கண்டன. இந்த நிலையில்தான், எதிலுமே போட்டியிடாவிட்டாலும், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர், ராஜ் தாக்கரே பாஜக அரசுக்கு எதிராக கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டார்.
காங்கிரஸ்காரர்களே செய்ய முடியாத அளவுக்கு இவரது பிரச்சாரங்கள், தீவிரமாக பாஜக கூட்டணியை தாக்கியது.
காங்கிரஸ் கட்சிக்கு இப்படி ஒரு நிலைமையா?... மாநிலத் தலைவர்கள் தொடர்ந்து ராஜினாமா
தீவிர பிரச்சாரம்
ஒரு கட்டத்தில் ராஜ்தாக்கரே பிரச்சார செலவுகளை, எதிர்க்கட்சி கூட்டணியில்தான், சேர்க்க வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை வைக்கும் அளவுக்கு நிலைமை சென்று விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பாஜக அரசின் தோல்விகள் என்ற பெயரில், செய்தித்தாள் செய்தி கட்டிங், ஆடியோ பதிவுகள், வீடியோ பதிவுகள் உள்ளிட்ட பலவற்றையும் தனது பிரச்சார கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அவர் கொண்டு சென்றார்.
8 தொகுதிகள்
நான்டட், சோலாப்பூர், கோலாப்பூர், சதாரா, புனே, ராய்காட், மாவல், நாசிக், மும்பை தெற்கு, மும்பை வட கிழக்கு ஆகிய பகுதிகளில் ராஜ்தாக்கரே பிரச்சாரம் செய்தாலும் அதில் 8 தொகுதிகளை பாஜக கூட்டணி வென்றது. அதிலும், காங்கிரசின் பலம் வாய்ந்த தொகுதியான நான்டட் தொகுதி முன்னாள் முதல்வர் அசோக் சவான், வசமிருந்து, பாஜகவுக்கு சென்றுள்ளது.
காங்கிரஸ் தயக்கம்
மும்பை நகரம், மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா அமைப்பின் கோட்டை என்று வர்ணிக்கப்படுகிறது. ஆனால் அங்கும் அவர் பிரசாரம் நடத்திய மும்பை கிழக்கு மற்றும், மும்பை வட கிழக்கு ஆகிய தொகுதிகளை பாஜக கூட்டணி வென்றுள்ளது. மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா இவ்வளவு தூரம் பாஜக கூட்டணியை தாக்கிப் பேசியும், அதை, காங்கிரஸ் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ராஜ்தாக்ரே வருத்தம்
ஆரம்பம் முதலே ராஜ்தாக்கரே ஆதரவை பெறுவதில் காங்கிரஸ் கட்சிக்கு தயக்கம் இருந்து வந்தது. அது கடைசி வரை நீடித்து. அவரது பிரச்சாரம் யாருக்கும் பலனின்றி முடிந்துவிட்டது விட்டது என்கிறார்கள். ஆக, இவ்வளவு கஷ்டப்பட்டு புலனாய்வு அரசியல்வாதி என்று பெயர் எடுத்தும், தனது பிரச்சாரம் மக்கள் மத்தியில், எடுபடவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார் ராஜ் தாக்கரே.