மகாராஷ்டிராவில் புதிய அரசு... இறங்கி வந்த சிவசேனா, காங்.... நல்லாவே கேம் ஆடும் சரத்பவாரின் என்சிபி?
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. ஆனாலும் தேசியவாத காங்கிரஸ் ஏதோ ஒரு கண்ணா மூச்சி ஆட்டத்தை ஆடுவதாக சந்தேகிக்கின்றனராம் காங்கிரஸ் தலைவர்கள்.
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு இதுநாள் பரம எதிரிகளாக இருந்த என்சிபி, காங்கிரஸுடன் கை கோர்க்கிறது சிவசேனா. தொடக்கத்தில் சிவசேனாவுடன் கைகோர்ப்பதா? என தயங்கியது காங்கிரஸ்.
டெல்லியில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் கேரளா தலைவர்கள் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இக்கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் கூட தேசியவாத காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகத்தான் காங்கிரஸ் கூறி இருந்தது.
சென்னை தியாகராய நகர் பகுதியில் புதிய மாற்றங்கள்.. சாலைகள் ஒரு வழிப்பாதையாக அறிவிப்பு
சரத்பவார் காரணம்
இதற்கு காரணம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் என கூறப்படுகிறது. சோனியா காந்தியுடன் தொலைபேசியில் பேசிய சரத்பவார், சிவசேனாவுடன் நிறைய பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியிருக்கிறது என கூறியிருக்கிறார். இதனால்தான் பட்டும்படாமலும் காங்கிரஸ் தரப்பில் அப்படி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டதாம்.
ஆர்வம் காட்டாத பவார்
இதனையடுத்து செவ்வாய்க்கிழமையன்றும் கூட சரத்பவார், பேச்சுவார்த்தைகளில் ஆர்வம் காட்டாதவராகத்தான் இருந்தார் என்பதை அவரது பேட்டியே வெளிப்படுத்தியது. சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை மருத்துவமனையில் சந்தித்துவிட்டு வெளியே வந்தார் சரத்பவார். அப்போது செய்தியாளர்கள் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடைபெறுமா என கேட்டதற்கு, யார் சொன்னாங்க? எந்த பேச்சுவார்த்தை? எனக்கு எதுவும் தெரியாதே? என்றார்.
திடீர் முடிவு
அதேநேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், மல்லிகார்ஜூன கார்கே, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் மும்பைக்கு புறப்பட்டனர். காங்கிரஸ் தலைவர்கள் மும்பைக்கு வந்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென ஆளுநருக்கு என்சிபி பகல் 12.30 மணிக்கே ஒரு இ மெயில் அனுப்பியது. அதில்தான் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்டது. இதனை நிராகரித்த ஆளுநர் உடனடியாக ஜனாதிபதி ஆட்சிக்கும் பரிந்துரைத்தார். இரவு 8.30 மணி வரை கெடு இருந்தும் கூட என்சிபி ஏன் அவசரம் காட்டியது? என்சிபி ஏன் குழப்பங்களுக்கு காரணமாக இருந்தது? என்பதும் ஒரு கேள்வி.
திட்டமிட்ட ஒன்றா?
அதுவும் பிரதமர் மோடி பிரேசில் புறப்படும் நேரத்தில் என்சிபி ஒரு முடிவெடுக்க.. அதேநேரத்தில் ஆளுநரும் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்க...உடனே மத்திய அமைச்சரவை கூடி அதற்கு ஒப்புதலும் தர இதெல்லாம் திட்டமிட்ட ஒன்றாக தெரியவில்லையா? என சுட்டிக்காட்டுகிறது காங்கிரஸ் தரப்பு. என்சிபியை பொறுத்தவரை சிவசேனா- காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைத்தாலும் கூட தம்மை பெரியண்ணனாக கருதுகிறது என்பது காங்கிரஸின் கருத்து.
என்சிபி மனோநிலை
இதனால்தான் சிவசேனாவுடன் நேரடியாக காங்கிரஸ் பேச்சுவார்த்தைகளையும் தொடங்கிவிட்டது. நள்ளிரவில் அகமது பட்டேலை உத்தவ் தாக்கரே சந்தித்ததன் பின்னணியும் இதுதானாம். காங்கிரஸுக்கும் சேர்த்து என்சிபிதான் சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்கிற மனநிலையில்தான் அக்கட்சித் தலைவர்கள் இருந்துள்ளனர்.
அஜித்பவார் ஆட்டம்
ஆனால் இதை காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை. இதனையடுத்தே குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழுவை கங்கிரஸ் அமைத்தது. இதனால் என்சிபியும் ஒரு குழுவை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இக்குழுக்களின் பேச்சுவார்த்தைக்கு முன்னரும் ஒரு நாடகம் நடந்தது. திடீரென இன்று காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என என்சிபி தலைவர் அஜித்பவார் நேற்று இரவு குண்டை வீசினார். பின்னர் சிறிது நேரத்திலேயே அதெல்லாம் இல்லை.. தற்போது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.. ரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் அஜித்பவார் அப்படிச் சொன்னார் என்கிறது காங்கிரஸ்.
கண்ணாமூச்சி ஆட்டம்
இப்படி ஒவ்வொரு நகர்விலும் என்சிபி ஆட்டம் ஆடுவதை காங்கிரஸ் ரசிக்கவில்லையாம். சிவசேனாவும் கூட புதிய கூட்டாளிகள் என்பதற்காக கனத்த அமைதி காத்து கொண்டிருக்கிறதாம். என்சிபி ஆடும் இந்த கண்ணாமூச்சியின் விளைவுகள் என்னவாக இருக்குமோ? என்பது மகாராஷ்டிரா அரசியல் பார்வையாளர்கள் கவலை.