கோயில்.. பண்டிகைக்காக செலவழிக்கும் பணத்தை இனி பள்ளிக்காக செலவழிப்போம்.. கிராம மக்கள் முடிவு
மும்பை: மகாராஷ்டிராவில் ஒரு கிராம மக்கள் மத பண்டிகைகளுக்காக செலவழிக்கும் பணத்தை பள்ளிக்கூடத்திற்காக செலவழிக்க முடிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் அவுரங்காபாத்தில் உள்ள போக்ரி கிராம மக்கள், கோவில், பண்டிகை உள்ளிட்ட மத வழிபாடுகளுக்கு தேவையில்லாமல் செலவு செய்யக்கூடாது என்று முடிவு எடுத்துள்ளதுடன் அதற்கு பதிலாக அந்த பணத்தை போக்ரி கிராமத்தில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தை விரிவுபடுத்துவதற்காக இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்க திட்டமிட்டுள்ளனர். இந்த தகவலை ஜில்லா பரிஷத் தலைமை நிர்வாக அதிகாரி பாவ்னீத் கவுர் தெரிவித்தார்.
இந்த முயற்சி குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பெண் தலைவரான பாவ்னீத், "பள்ளியை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இந்த முயற்சியில் ஜில்லா பரிஷத்தும் முழு மனதுடன் பங்களிக்கும்.
இரண்டு ஏக்கர்
கிராமவாசிகள் ஏற்கனவே அரசு நடத்தும் அங்கன்வாடி மற்றும் அரசு பள்ளியின் கணினி ஆய்வகத்தை மேம்படுத்தியுள்ளார்கள். இப்போது அவர்கள் இங்கே இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கவும் பள்ளி வளாகத்தை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளனர் என்றார்.
மத நிகழ்வுகள்
தற்போதைய போக்ரி கிராம பள்ளி வளாகம் 20,000 சதுர அடி (சுமார் 0.45 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ளது. பள்ளியையும் அதன் வசதிகளையும் மேம்படுத்துவதற்காக, மத நடவடிக்கைகள் தொடர்பான செலவுகளைக் குறைக்க கிராம மக்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு முடிவை எடுத்திருக்கிறார்கள். பகவத் சப்தா எனப்படும் திருவிழாவின் (ஒரு வார கால மத நிகழ்வு) போது தேவைப்படும் கூடாரங்கள் மற்றும் இனிப்புகள் உள்ளிட்ட பல்வேறு மத நிகழ்வுகளுக்கான செலவுகளை கிராம மக்கள் குறைத்துள்ளார்கள்.
பருப்பு
பல்வேறு மத விருந்துகளின் போது, ஒரே இடத்தில் '' பருப்பு '' தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு நபரும் சப்பாத்திகள் கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்கள். இந்த வழியில் சேமிக்கப்பட்ட தொகை பள்ளியின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த முடிவு செய்திருக்கிறார்கள்.
கிராம மக்கள்
இது தொடர்பாக பள்ளிக்கு தேவையான நிலத்தை வாங்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ள போஸ்லே கூறுகையில், பள்ளியின் கணினி ஆய்வகத்தை மேம்படுத்தவும், அங்கன்வாடி டிஜிட்டல் மற்றும் கவர்ச்சிகரமானதாகவும் மாற்ற அவர்கள் இதுவரை ரூ .10 லட்சம் செலவிட்டுள்ளோம். "இதற்காக ரூ .50 ஆயிரம் பணத்தை கிராம பஞ்சாயத்து வழங்கியது. மீதமுள்ளவை கிராம மக்களால் வழங்கப்பட்டது.
வாங்க போகிறோம்
இப்போது பள்ளி வளாகத்தை விரிவுபடுத்துவதற்காக இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்., ஆரம்ப தொகை ஏற்கனவே நில உரிமையாளருக்கு செலுத்தப்பட்டுள்ளது. எங்கள் கிராமத்தில் 450 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீடும் குறைந்தபட்சம் ரூ .5,000 பங்களிக்கும். ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்கள் ஏக்கருக்கு ரூ .5,000 க்கு மேல் பங்களிப்பார்கள். இந்த நிதி பள்ளிக்கு நிலம் வாங்க உதவும்" என்று கூறினார்.