பாஜகவுக்கு ஆதரவு தாங்க! சிவசேனா ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்த பட்னாவிஸ்! பரபர மகாராஷ்டிரா அரசியல்
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை, பாஜகவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்றிரவு குஜராத்தில் சந்தித்து பேசியுள்ளார். இதில் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பபதற்கான வாய்ப்புகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.
இந்த கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சரான ஏக்நாத் ஷிண்டேவுடன் அணி திரண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளனர்.
பரபர மகாராஷ்டிரா! சிவசேனா 16 அதிருப்தி எம்எல்ஏக்ளுக்கு பறந்து சென்ற தகுதிநீக்க நோட்டீஸ்!
மகாராஷ்டிரா அரசியல் நிலவரம்
இதனால் மகாராஷ்டிராவில் மகா விகாஷ் அகாடி கூட்டணியின் ஆட்சி கவிழும் நிலை உள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பை திரும்ப வேண்டும். உத்தவ் தாக்கரேவிடம் கோரிக்கை வைத்தால் ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறவும் தயாராக இருப்பதாக சிவசேனாவின் மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத் கூறினார். இதிலும் அதிருப்தி எம்எல்ஏக்கள் மனம் மாறவில்லை. இந்நிலையில் தான் அதிருப்தி எம்எல்ஏக்களின் செயலுக்கு பின்னால் பாஜக இருப்பதாக கூறப்படுகிறது.
தேசியக்கட்சியின் ஆதரவு
இதனை உறுதி செய்யும் வகையில் தான் அதிருப்தி எம்எல்ஏக்களும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியை விட்டுவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் ஜூன் 23ல் ஏக்நாத் ஷிண்டே தன்னுடன் உள்ள எம்எல்ஏக்களிடம் பேசினார். அப்போது, ‛‛தேசிய கட்சியின் ஆதரவு நமக்கு உள்ளது. நமக்கு தேவைப்படும் சமயத்தில் அவர்கள் நமக்கு உதவுவார்கள்'' என தெரிவித்தார். இது பாஜக கட்சியை மனதில் வைத்து தான் ஏக்நாத் ஷிண்டே கூறியதாக எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர்.
தேவேந்திர பட்னாவிஸ் ஆலோசனை
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் தனது வீட்டில் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தால் அதனை சரியாக பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்பது பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது.
ஏக்நாத் ஷிண்டேவுடன் சந்திப்பு
இந்நிலையில் தான் தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் சந்தித்து பேசிய தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் நேற்றிரவு குஜராத் மாநிலம் வதேதராவில் சந்தித்து பேசியுள்ளனர். இதற்காக கவுஹாத்தியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே வதோதரா சென்றார். இருவருக்கும் இடையே மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
விரைவில் ஆட்சிமாற்றம்
அப்போது மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்புக்கு பிறகு ஏக்நாத் ஷிண்டே சிறப்பு விமானத்தில் மீண்டும் கவுஹாத்திக்கு திரும்பினார். இதன்மூலம் விரைவில் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் நிகழலாம் எனவும், சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.