மகாராஷ்டிர அமைச்சரவை துறைகள் பங்கீடு.. உள்துறை, பொதுப்பணி துறை சிவசேனாவிற்கே.. துணை முதல்வர் இல்லை
மும்பை: உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்று இரண்டு வாரங்களாகியுள்ள பிறகு, மகாராஷ்டிராவில் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி அரசு, இறுதியாக அமைச்சரவை துறை பங்கீடு விவகாரத்தில் ஒரு புரிதலுக்கு வந்துள்ளது.
முதல்வர் உத்தவ் தாக்ரேவிற்கு, உள்துறை அமைச்சகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நிதி மற்றும் வீட்டுவசதி துறை சரத் பவார் தலைமையிலான என்.சி.பிக்கு போகிறது. காங்கிரசுக்கு வருவாய் துறை கிடைக்கும்.
சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவுக்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல், நீர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், சுற்றுலா, மண் மற்றும் நீர் பாதுகாப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள், முன்னாள் படைவீரர்களின் நலத் துறைகள் வழங்கப்பட்டுள்ளன.
கூட்டணியில் பெரும் போட்டா போட்டி நிலவிய ஒரு துறை பொதுப்பணித் துறை (பி.டபிள்யூ.டி). அத்துறையும் சிவசேனாவுக்கேச் சென்றுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம்.. தீவிரமாக கையில் எடுத்த திமுக.. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
நிதி மற்றும் வீட்டுவசதி தவிர, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஊரக வளர்ச்சி, நீர்வளம், சிறப்பு உதவி மற்றும் சமூக நீதி, கலால், திறன் மேம்பாடு, மருத்துவ நிர்வாக இலாகாக்கள் கிடைத்துள்ளன.
காங்கிரசுக்கு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருத்துவ கல்வி, பள்ளி கல்வி, கால்நடை பராமரிப்பு, பால் மேம்பாடு, மீன்வளத் துறைகள் கிடைத்துள்ளன. துணை முதல்வர் பதவி உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.