ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. சோனியாவின் மீட்டிங்கை கண்டுகொள்ளாத ராகுல்.. எங்கே போனார்!?
மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் பிரச்சனை குறித்து காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் பிரச்சனை குறித்து காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் எந்த விதமான ஆலோசனையிலும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாது, எங்களுக்கு போதிய ஆதரவு இல்லை என்று பாஜக கட்சி கூறிவிட்டது. சிவசேனா கட்சி ஆதரவு தரவில்லை என்பதால் பாஜக இந்த முடிவை எடுத்து இருக்கிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாவது பெரிய கட்சி என்பதால் சிவசேனாவிற்கு ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆலோசனை
இந்த நிலையில் சிவசேனாவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி காலையில் இருந்து ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போது நடக்கும் ஆலோசனை கூட்டத்துடன் மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஆலோசனை செய்து வருகிறது. ஆனால் இன்னும் சிவசேனாவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தெளிவான முடிவை காங்கிரஸ் எடுக்கவில்லை.
சோனியா ஆலோசனை
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு இது தொடர்பாக குழப்பமான நிலையே நிலவி வருகிறது. மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சி சிவசேனாவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறி வருகிறது. ஆனால் தேசிய காங்கிரஸ் , சிவசேனாவுடன் கூட்டணி வைக்க கூடாது என்று கூறி வருகிறது.
மீண்டும் கூட்டம்
இதனால் காங்கிரஸ் கட்சி மீண்டும் மீண்டும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியில் இவ்வளவு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எதுவுமே பேசவில்லை. ஆம், இது தொடர்பாக ராகுல் காந்தி எந்த கவலையும் படவில்லை.
வரவே இல்லை
மிக முக்கியமாக அவர் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவே இல்லை. முழுதாக அரசியலில் இருந்து தன்னை கொஞ்சம் கொஞ்சமாக ராகுல் காந்தி விலக்கி வைத்துக் கொண்டே இருக்கிறார். மகாராஷ்டிரா தேர்தலின் போது கூட ராகுல் காந்தி சரியாக பிரச்சாரம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சோனியா காந்தியிடம்
சோனியா காந்தியிடம் கூட அவர் இந்த பிரச்சனை குறித்து எதுவும் பேசவில்லை. லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், அவர் தேர்தலில் பெரிய அளவில் விருப்பம் காட்டுவது கிடையாது என்று கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி மீண்டும் தலைமை பொறுப்பிற்கு வந்தார்.
ராகுல் காந்தி ஏன் இப்படி?
அதற்கு பின் ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள் பலர் கட்சியில் முக்கிய பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். கட்சிக்குள் சோனியாவின் விசுவாசிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இந்த கோபத்திலும் ராகுல் காந்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.