மகாராஷ்டிராவில் தொடங்கிய தடுப்பூசி ஒத்திகை... 4 மாவட்டங்களில் ஒத்திகை
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள 4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு நேற்று அனுமதியளிக்கப்பட்டது. நாடு முழுவதும் விரைவில் தடுப்பூசி அளிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி வழங்கும் ஒத்திகை நான்கு மாநிலங்களில் முதல்கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, தடுப்பூசி செலுத்தும் இரண்டாம் ஒத்திகை இன்று நாடு முழுவதும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் 4 மாவட்டங்களில் ஒத்திகை
அதன்படி மகாராஷ்டிராவில் புனே (மேற்கு மகாராஷ்டிரா), நாக்பூர் (விதர்பா), நந்தூர்பார் (வடக்கு மகாராஷ்டிரா) மற்றும் ஜல்னா (மத்திய மகாராஷ்டிரா) என நான்கு மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி ஒத்திகை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த நான்கு மாவட்டங்களிலும் உள்ள மூன்று சுகாதார நிலையங்கள் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
25 பேருக்கு டம்மி தடுப்பூசி
ஒவ்வொரு சுகாதார நிலையத்திலும் 25 சுகாதார பணியாளர்களுக்கு இந்த ஒத்திகையில் டம்மி தடுப்பூசி வழங்கப்படும். ஒத்திகை நடைபெறும் சுகாதார நிலையத்தில் ஐந்து பேர் கொண்ட டீம் இருக்கும். அவர்களில் ஒருவர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்வார். மற்றவர்கள் அவருக்கு உதவியாக இருப்பார்கள். இந்த நான்கு மாவட்டங்களில் இருக்கும் தலா 25 நிலையங்களிலும் தற்போது தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.
சுகாதார நிலையம்
இந்தச் சோதனை நடைபெறும் சுகாதார நிலையத்தில் காத்திருக்கும் அறை, தடுப்பூசி செலுத்தும் அறை, கண்காணிப்பு அறை என மூன்று அறைகள் இருக்கும். தடுப்பூசி எடுத்துக்கொள்ள வருபவர்கள் முதலில் காத்திருக்கும் அறையில் இருப்பார்கள். அங்கு அவரது அடையாள அட்டைகள் சரி பார்க்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் அறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அதன் பின், சிறிது நேரம் கண்காணிப்பு அறையில் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்களின் உடல் நிலை கண்காணிக்கப்படும். அதன் பின்னர், அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
ஒத்திகை
சேமிப்பு தளங்களில் இருந்து தடுப்பூசியைக் கொண்டு செல்வது, தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களின் அடையாளங்களைச் சரி பார்ப்பது, என அனைத்தும் உண்மையான தடுப்பூசி இல்லாமல் இந்த ஒத்திகை நடைமுறையில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் உண்மையான தடுப்பூசி வழங்கப்படும்போது களையப்படும்.
அரசின் திட்டம்
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள 3.25 கோடி பேருக்கு மூன்று கட்டங்களாகத் தடுப்பூசியை வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. முதலில் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசியை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
16 ஆயிரம் பேர் தயார்
தடுப்பூசி வழங்கும் முறை குறித்து மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் சுமார் 16 ஆயிரம் பேருக்குப் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன நிலையங்கள் முதல் தடுப்பூசி செலுத்தும் இடங்கள் வரை அனைத்தும் தயாராக இருப்பதாகவும் மத்திய அரசின் ஒப்புதலுக்காகவே காத்திருப்பதாகவும் மாகாரஷ்டிரா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.