படுத்த படுக்கையாக காய் நகர்த்தியவர்.. பாஜகவின் புதிய எதிரியான சஞ்சய் ராவத்.. மும்பையின் சாணக்யா
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு பின் மிக முக்கிய காரணமாக அந்த கட்சியின் எம்பி சஞ்சய் ராவத்தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு பின் மிக முக்கிய காரணமாக அந்த கட்சியின் எம்பி சஞ்சய் ராவத்தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்தான் அங்கு மூன்று கட்சி எம்எல்ஏக்களையும் ஒன்றாக இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. பெரும் போராட்டத்திற்கு பின் அங்கு சிவசேனா ஆட்சி அமைக்க உள்ளது. பாஜக கட்சிக்கு இந்த திருப்பம் அதிர்ச்சி அளித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இன்று அந்த கட்சி கூட்டணி உடன்படிக்கையை மேற்கொள்ள இருக்கிறது. இன்று இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
ஆலோசனை நடத்தினார்
இந்த நிலையில் சிவசேனா கட்சியின் எம்பி சஞ்சய் ராவத்தான் இதற்கான ஆலோசனை கூட்டங்களை நடத்தினார். தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாம் என்று முதலில் ஐடியா கொடுத்ததே சஞ்சய் ராவத்தான். இவர்தான் முதல் ஆளாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உடன் ஆலோசனை நடத்தினார்.
பலமுறை ஆலோசனை
முதல்முறை ஆலோசனை கூட்டம் தோல்வியில் முடிந்தாலும் கூட சஞ்சய் ராவத் விடவில்லை. காங்கிரஸ் தலைவர்களை சமாதானம் செய்தார். அதன்பின் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சமாதானம் செய்தார். இவர் கடந்த 2 வாரத்தில் மட்டும் 12க்கும் அதிகமான ஆலோசனை கூட்டங்களை நடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் முக்கியம்
மஹாராஷ்டிராவில் பாஜகவை ஆட்சி அமைக்க விடாமல் தடுத்து வரும் தலைவர்களில் முக்கியமானவர் என்றால், அது சிவசேனா கட்சியின் ராஜ்ய சபா எம்பி சஞ்சய் ராவத்தான். இவர் மகாராஷ்டிராவின் டிகே சிவக்குமார் போல உருவெடுத்துள்ளார். இவர்தான் சிவசேனா எம்எல்ஏக்களை பாதுகாத்து வருகிறார்.
காய்கள் நகர்த்தியவர்
பாஜகவிற்கு எதிராக தேர்தல் முடிவு வந்த நாளில் இருந்தே மிக கடுமையாக இவர்தான் காய் நகர்த்தி வருகிறார். சிவசேனா கட்சியில்தான் இவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 2004ல் இவர் பால் தாக்கரேவின் ஆதரவை பெற்று கட்சியில் மூத்த உறுப்பினர் என்ற நிலையை அடைந்தார். அதோடு ராஜ்யசபா எம்பியாக தேர்வானார். அந்த நாளில் இருந்தே இவருக்கு கட்சியில் பெரிய மரியாதை இருக்கிறது.
பேசினார்
இவர் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சம்மதிக்க வைத்தாலும் கூட, அக்கட்சியில் இருக்கும் சில எம்எல்ஏக்கள் கூட்டணிக்கு ஒத்துழைக்கவில்லை. அவர்களை எல்லாம் தனியாக சந்தித்து இவர் பேசினார். பாஜகவை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை பேசி அவர்களை சமாதானம் செய்தார்.
செம மனிதர்
மறைந்த பால் தாக்கரே, சஞ்சய் ராவத்தை தன்னுடைய இன்னொரு மகனாக பார்த்தார் என்றும் கூறுவார்கள். அதற்கு ஏற்றப்படியே சஞ்சய் ராவத் கட்சிக்கு மிகவும் கட்டுப்பட்டு விசுவாசமாக இருந்தார். தற்போதும் அவர் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார். இப்போது சிவசேனா வலிமையாக இருக்க சஞ்சய் ராவத் மிக முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் நலம்
இவருக்கு இடையில் உடல் நலம் மோசமானது. இதனால் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்றார். அவ்வளவு மோசமான உடல்நிலையில் கூட அவர் சிவசேனாவின் சாமனா பத்திரிக்கையில் தீவிரமாக கட்டுரைகள் எழுதினார். தொடர்ந்து கட்சியினரை வழி நடத்தினார்.
அனைத்திற்கும் பலன்
அவரின் கடினமான உழைப்பிற்கு பலனாக தற்போது சிவசேனா கட்சி அங்கு ஆட்சி அமைக்க இருக்கிறது. இன்று இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. பாஜகவிற்கு புதிய சிம்ம சொப்பனமாக தற்போது சஞ்சய் ராவத் உருவெடுத்துள்ளது.