அரசியலின் கூல் கேப்டன்.. கடைசியில் சிக்ஸர் அடித்த சரத் பவார்.. மகாராஷ்டிராவில் நொடிக்கு நொடி அதிரடி
மகாராஷ்டிராவில் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக சரத் பவர் உருவெடுத்து இருக்கிறார்.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக சரத் பவார் உருவெடுத்து இருக்கிறார். தான் இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில் கற்றுக்கொண்டது என்ன என்று சரத் பவார் நிரூபித்து வருகிறார்.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வந்து மூன்று வாரம் ஆகியும் இன்னும் அங்கு யாராலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. பாஜக அங்கு ஆட்சி அமைக்க முடியாது என்று பின்வாங்கிவிட்டது. சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.
அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. அங்கு சிவசேனாவுடன் நடந்த மோதலால் தற்போது பாஜக அரசு தனது அமைச்சரவையை கலைத்துள்ளது. மகாராஷ்டிரா அரசியலில் சத்தமில்லாமல் கிங் மேக்கராக சரத் பவார் உருவெடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா ட்விஸ்ட்.. பாஜக கூட ஹாயாக இருக்கலாம்.. உண்மையில் காங்கிரசுக்குதான் அக்னி பரிட்சை
சரத் பவார் எப்படி
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு முன்பு சரத் பவார் அரசியலில் நீடிப்பாரா? பாஜக என்ற மிகப்பெரிய பிம்பத்திற்கு முன் அவர் தாக்கு பிடிப்பாரா என்று கேள்விகள் எழுந்தது. ஆனால் அதை எல்லாம் குறித்து கவலைப்படாமல் தன்னுடைய விஷயங்களை மிக கவனமாக செய்து வந்தார். அவர் எங்குமே பாஜகவை குறித்து கவலைப்படவில்லை.
மிக முக்கியம்
கூட்டணி பேச்சுவார்த்தையின் போதும், பிரச்சாரத்தின் போதும் அவர் பெரிதாக பாஜகவை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய பணிகளை மட்டும் செய்து வந்தார். பொதுவாக கார்ப்பரேட் அலுவலகங்களில் stick to basics என்று ஒரு விதியை குறிப்பிடுவார்கள். உங்களால் பெரிய விஷயங்களை செய்ய முடியவில்லை என்றால் அவசியமான சிறிய விஷயங்களை செய்து முடியுங்கள்.
நேரம் கிடைத்தது
அடிப்படை விஷயங்களில் சரியாக இருங்கள். அதற்கு பின் நேரம் கிடைக்கும் போது பெரிய விஷயங்களை கவனிக்கலாம் என்பார்கள். அப்படித்தான் சரத் பவாரும், பாஜகவை வீழ்த்துவது குறித்து கவலைப்படாமல், 45+ இடங்களை வெல்ல மட்டும் குறி வைத்து களமிறங்கினார். அதேபோல் 53 இடங்களில் வெற்றிபெற்றார்.
நோ அவசரம்
அதன்பின் பெரிய விஷயமான பாஜகவை நோக்கி தன் பார்வையை திருப்பினார். ஆனால் இதற்கு பின்பும் கூட சரத் பவார் அவசரப்படவில்லை. தோனி போல 40வது ஓவரில் கூட சரத் பவார் டொக் வைத்து ஆடிக்கொண்டு இருந்தார். சிவசேனா, பாஜகவின் உறவு மொத்தமாக முறியும் வரை காத்து இருந்தார். அவர்கள் இருவரும் சேர மாட்டார்கள் என்பது உறுதியான பின்தான் சரத் பவார் களமிறங்கவே தொடங்கினார்.
மிக கவனம்
தேசியவாத தலைவர் சரத் பவார் சிவசேனா அல்லது பாஜகவிற்கு ஆதரவு அளிப்பார் என்றுதான் எல்லோரும் பேசினார்கள். ஆனால் சரத் பவார் அப்படி எதையும் செய்து கெட்ட பெயர் எடுக்கவில்லை . மிக கவனமாக யாருக்குமே ஆதரவு அளிக்காமல் தனியாக இருந்தார். நாங்கள் எதிர்கட்சியாகவே இருப்போம் என்று உறுதியாக எந்த ஆசையையும் வெளிக்காட்டாமல் பேசினார்.
காரணம்
அவரின் அரசியல் முதிர்ச்சி மற்றும் சாணக்கியத்தனம் இரண்டும்தான் இதற்கு காரணம். சிவசேனாவுடன் கூட்டணி வைத்திருந்தால், கர்நாடகாவில் மஜதவிற்கு நேர்ந்தது போல ஒரு வருடத்தில் ஆட்சி கவிழந்து இருக்கும். பாஜகவுடன் கூட்டணி வைத்து இருந்தால், தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் கோபம் கொண்டு இருப்பார்கள். இரண்டு விஷயத்தையும் சரத் பவார் தவிர்த்து வந்தார்.
கண்டிப்பாக உடையும்
சிவசேனா - பாஜக கூட்டணி கண்டிப்பாக உடையும். அதுவரை பொறுத்திருக்கலாம். நாமாக போய் ஆதரவு தர கூடாது. அவர்களாக வர வேண்டும் என்று காத்து இருந்தார். களத்தில் முக்கியமான கட்டத்தில் கூல் கேப்டனாக இருந்தும், சிவசேனா, பாஜக இரண்டு கட்சிக்கும் டென்ஷன் ஏற்றினார்.
அரசியல்
அப்போதும் அமித் ஷா என்ன முடிவு எடுப்பார் என்றுதான் தேசிய அரசியல் உற்றுநோக்கும். ஆனால் இப்போது அமித் ஷாவே, சரத் பவார் என்ன முடிவு எடுப்பார்? யாருடன் கூட்டணி வைப்பார் என்று கவனிக்க தொடங்கிவிட்டார். இதுதான் சரத் பவாரின் அரசியல் முயற்சிக்கு காரணம்.
கூட்டணி
இதோ இப்போதும் கூட, சிவசேனா என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கோரிக்கையை தேசியவாத காங்கிரஸ் வைத்து இருக்கிறது. பாஜகவை மகாராஷ்டிராவில் தனித்துவிட தன்னால் முடிந்த அனைத்து விஷயங்களையும் சரத் பவார் செய்கிறார்.
அரசியல் வரலாறு
30 வருடத்திற்கும் மேலாக தான் அரசியல் கற்ற பாடங்களை எல்லாம் தற்போது அவர் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார். இதற்கு அமித் ஷா எப்படி பதிலடி கொடுப்பார். மகாராஷ்டிராவில் என்னதான் நடக்கும் என்று நொடிக்கு நொடி விறுவிறுப்பு கூடி வருகிறது.