மகாராஷ்டிரா.. ஆளும் கூட்டணிக்குள் பெரும் பிளவு.. என்சிபி அமைச்சர்களுடன் சரத் பவார் மீட்டிங்
மும்பை: மகாராஷ்டிராவில், ஆளும், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகியவை அடங்கிய மகாராஷ்டிரா விகாஸ் அகாதி கூட்டணியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேடு விவகாரத்திற்கு அடுத்ததாக புதிதாக இந்த பிளவுக்கு காரணம், எல்கர் பரிசத் வழக்கு விசாரணைதான்.
பரபரப்பான சூழலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்களுடடான ஆலோசனைக் கூட்டத்திற்கு, சரத் பவார் அழைப்பு விடுத்து பரபரப்பை அதிகரித்துள்ளார்.
எல்கர் பரிஷத் வழக்கை, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு முதல்வர் உத்தவ் தாக்ரே அனுமதித்திருக்க கூடாது, மகாராஷ்டிரா காவல்துறைதான் தொடர்ந்து விசாரித்திருக்க வேண்டும் என்று சரத் பவார் முதல் முறையாக கூட்டணிக்குள் இருந்து ஒரு அதிருப்தி குரலை நேற்று ஒலித்திருந்தார்.
எல்கர் பரிஷத் வழ்கை, என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் விசாரிக்க புனே நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. என்.ஐ.ஏதான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும், என்று, பிறப்பித்த உத்தரவு, சரியானதுதான், சட்ட விரோதமானது இல்லை என்று புனே நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.
விவகாரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்!
உள்துறை அமைச்சர்
இதுகுறித்து சரத் பவார் கூறுகையில், என்.ஐ.ஏ விசாரணைக்கு, எடுத்துக்கொள்ள மாநில அரசு சம்மதித்தது பெரிய தவறு. மத்திய அரசும், இதில் தலையிட்டது தவறு. இவ்வாறு அவர் கூறினார். தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், உள்துறை அமைச்சருமான அனில் தேஷ்முக் கூறுகையில், இந்த பிரச்சினையில், முதல்வர் உத்தவ் தாக்ரே, உள்துறை அமைச்சரான தன்னைத் தாண்டிச் செயல்பட்டுவிட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தலைவலி
தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆர்) திட்டத்தை மகாராஷ்டிராவில் செயல்படுத்த உத்தவ் தாக்ரே ஓகே கூறியிருந்தார். ஆனால் இதற்கு, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இப்போது, புது தலைவலியாக எல்கர் பரிஷத் வழக்கும் சேர்ந்துள்ளது. இது மகாராஷ்டிராவிலுள்ள ஆளும் கூட்டணிக்குள் விரிசலை மேலும் அதிகரித்துள்ளது.
ஒருமித்த கருத்து
தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மஜீத் மேமன் கூறுகையில், என்பிஆரை, தேசியவாத காங்கிரஸ் ஏற்காது. சரத் பவார் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டார். கூட்டணியிலுள்ள 3 கட்சிகளும் இதில் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பாஜகவும்-சிவசேனாவும் பல கொள்கைகளில் ஒத்துப்போவதால், மகாராஷ்டிரா ஆளும் கூட்டணிக்குள் தினம் ஒரு பஞ்சாயத்து ஏற்பட்டு வருகிறது.
வெளியேறுகிறது என்சிபி
மகாராஷ்டிரா தேர்தலுக்கு பின்னர், சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி முறிந்தது. எனவே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கடந்த நவம்பரில், ஆட்சியை பிடித்துள்ளது சிவசேனா. இதனால்தான், இது பொருந்தாக் கூட்டணிபோல மாறிவிட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்களுடன் சரத் பவார் ஆலோசனை நடத்த உள்ள தகவல் பரபரப்பை அதிகரித்துள்ளது. அமைச்சரவையில் இருந்து தேசியவாத காங்கிரஸ் விலகுமா என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது.
எல்கர் பரிஷத் வழக்கு
2017 டிசம்பர் 31ம் தேதி, புனேவில் உள்ள சனிவர்வாடாவில் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டில் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் உரைகள் , கொரேகான்-பீமா போர் நினைவுச் சின்னம் அருகே வன்முறையைத் தூண்டியது என்பதுதான் குற்றச்சாட்டு. இந்த மாநாட்டை மாவோயிஸ்டுகள் ஆதரித்ததாக புனே போலீசார் கூறியுள்ளனர். இவ்வழக்கு விசாரணையின் போது, இடதுசாரி ஆர்வலர்கள் சுதிர் தவாலே, ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங், மகேஷ் ரவுத், ஷோமா சென், அருண் ஃபெரீரா, வெர்னான் கோன்சால்வ்ஸ், சுதா பரத்வாஜ் மற்றும் வரவர ராவ் ஆகியோரை புனே போலீசார் கைது செய்தனர். தற்போது சிறையில் உள்ளனர் இந்த ஆர்வலர்கள்.