அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. சிவசேனாவிற்காக ஆஜராகும் காங்கிரசின் கபில் சிபல்.. இதான் காரணம்!
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவிற்கு ஆளுநர் கூடுதல் அவகாசம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி இன்று வழக்கு தொடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா ஆளுநருக்கு எதிராக சிவசேனா தொடுத்து இருக்கும் வழக்கில் அக்கட்சி சார்பாக காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாட இருக்கிறார். இந்தியாவில் பிரபலமான மூத்த வழக்கறிஞர்களில் இவர் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா அரசியல் உச்சபட்ச கொதிநிலையில் சென்று கொண்டு இருக்கிறது. அங்கு ஆட்சி அமைக்க முடியாது என்று பாஜக கட்சி தெரிவித்துவிட்டது. அதேபோல் ஆட்சி அமைக்க தேடி வந்த வாய்ப்பை சிவசேனா நழுவவிட்டுவிட்டது.
இந்த நிலையில் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அம்மாநில ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்தார். ஆனால் புதிய திருப்பமாக அம்மாநில ஆளுநர் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்காத என்சிபி, காங்.. கடைசி நேரத்தில் என்ன நடந்தது? பின்னணி இதுதான்!
காங்கிரஸ் செய்யவில்லை
காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் வேகமாக முடிவு எடுக்கவில்லை. கூட்டணி குறித்து விரைந்து முடிவு எடுக்கவில்லை என்பதுதான் சிவசேனாவின் கனவு கலைய காரணம் என்கிறார்கள். காங்கிரஸ் கொஞ்சம் துரிதமாக முடிவு எடுத்து இருந்தால் சிவசேனா ஆட்சி அமைத்து இருக்கும்.
இல்லை
இதனால் சிவசேனா நிர்வாகிகள் சிலர் காங்கிரஸ் மீது கோபத்தில் இருக்கிறார்கள். நீங்கள் ஆதரவு தரவில்லை என்றால் பரவாயில்லை. அதை முன்பே சொல்லி இருக்கலாம். கடைசி வரை காரணமே இல்லாமல் காக்க வைத்தது தவறு. இது அரசியல் நாகரீகம் கிடையாது என்று கூறியுள்ளனர்.
அரசியல் திருப்பம்
சிவசேனா நிர்வாகிகள் இப்படி ஒரு பக்கம் காங்கிரஸ் மீது கோபத்தில் இருக்க, தற்போது சிவசேனா கட்சி தனது வழக்கிற்காக காங்கிரஸ் மூத்த உறுப்பினர் வழக்கறிஞர் கபில் சிபலை நாடி இருக்கிறது. மகாராஷ்டிரா ஆளுநருக்கு எதிராக சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளது. ஆட்சி அமைக்க போதிய நேரம் தரவில்லை என்றும், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்தது என்றும்வழக்கு தொடுத்துள்ளது.
அவர்கள் தொடுத்து இருக்கும் வழக்கில் அக்கட்சி சார்பாக காங்கிரஸ் கட்சியின் கபில் சிபல் ஆஜராகி வாதாட இருக்கிறார்.
முக்கியமானவர்
இந்தியாவில் பிரபலமான மூத்த வழக்கறிஞர்களில் இவர் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவசேனாவிற்கு எதிரான பல வழக்குகளில் இவர் ஆஜராகி இருக்கிறார். ஆனால் இப்போது அவர்களுக்காகவே ஆஜராகிறார். பொதுவாக சிவசேனா காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்களை பயன்படுத்தாது. அந்த கட்சியே பெரிய வழக்கறிஞர் படையை வைத்துள்ளது.
அவசரம்
ஆனால் அவசர வழக்கு என்பதாலும், ஏற்கனவே நிறைய முறை கபில் சிபல் ஆளுநர்களுக்கு எதிரான வழக்கில் ஆஜரானவர் என்பதாலும், அவரை சிவசேனா அணுகி உள்ளது. கபில் சிபிலும், மூத்த வழக்கறிஞர் சுனில் பெர்னாண்டஸும் இதில் ஆஜர் ஆகிறார்கள். என்னதான் காங்கிரஸ் உடன் மனஸ்தாபம் இருந்தாலும், அதே கட்சியின் உறுப்பினரை சிவசேனா அணுகி இருக்கிறது.. இதைத்தான் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டர் மகான் கூறினார் போல!