பிரியங்கா காந்தியின் குர்தாவை தொட யார் தைரியம் தந்தது..? உ.பி. போலீஸை விளாசும் பாஜக பெண் தலைவர்..!
மும்பை: உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தியின் குர்தாவை ஆண் காவலர் ஒருவர் பிடித்து தடுத்து நிறுத்தியதற்கு கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஹத்ராஸ் வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ராகுலும், பிரியங்காவும் நேற்று சென்றனர். முன்னதாக இவர்களை டெல்லி -நொய்டா சாலையில் மறித்த காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால் ராகுலுடன் 4 பேருக்கு மட்டும் அனுமதி அளித்தனர்.
அப்போது ஹத்ராஸ் செல்ல ராகுலுடன் வந்த அனைவருக்கும் அனுமதி வழங்கவேண்டும் என கேட்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பிரியங்கா காந்தியின் குர்தாவை பிடித்த இழுத்த ஆண் காவலர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தினார்.
இந்தப் புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்ட சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். உ.பி.யில் ஒரு பெண் போலீஸ் கூட இல்லையா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். இவர் தான் எதிர்க்கட்சிகாரர் எனப் பார்த்தால் சொந்தக் கட்சிக்காரர்களே யோகியை அர்ச்சிக்க தொடங்கியுள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநில பாஜக துணைத் தலைவர் சித்ரா கிஷோர் வாக் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரியங்கா காந்தியின் ஆடையை தொட்டு அவரை தடுத்து நிறுத்தியதற்காக போலீஸார் மீது உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ஒரு பெண் தலைவரின் ஆடையை ஆண் போலீஸ் எப்படி தொடலாம் என்றும் இது யார் கொடுத்த துணிச்சல் எனவும் அவர் வினவியுள்ளார்.
இது அரசியல் அல்ல.. 'அறம்' சியல்.. இந்திரா காந்தியாக மாறிய பிரியங்கா.. வைரலான ஒற்றை படம்
ஏற்கனவே உ.பி. போலீஸ் செயல்பாடுகள் குறித்து பாஜக மூத்த தலைவர் உமாபாரதி தனது கடும் அதிருப்தியை பதிவு செய்த நிலையில் இப்போது சித்ரா கிஷோர் வாக்கும் தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். இதனிடையே பிரியங்காவின் குர்தாவை தொட்டதற்காக உத்தரப்பிரதேச மாநில போலீசுக்கும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிகின்றன.