மஹாராஷ்டிரா மாநில பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள்... சமபலத்துடன் பாஜக -சிவசேனா -தேசியவாத காங்கிரஸ்..!
மும்பை: மஹாராஷ்டிரா மாநில பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் சமபலத்துடன் காணப்படுகின்றன.
மாவட்டங்களுக்கு ஏற்ப அங்குள்ள மக்கள் மத்தியில் கட்சிகள் பெற்றிருக்கும் செல்வாக்குகளுக்கு ஏற்ப வெற்றி தோல்வி முடிவுகள் அமைந்திருக்கின்றன.
கடந்த 15-ம் தேதி 34 மாவட்டங்களை உள்ளடக்கிய 14,234 பஞ்சாயத்துகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இரண்டு லட்சத்து 14 ஆயிரத்து 880 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் பார்த்தோம் என்றால் பாஜக 3,000-க்கும் குறையாத பஞ்சாயத்துக்களை கைப்பற்றியுள்ளது.
இதேபோல் அதற்கு சற்றும் சளைக்காத வகையில் சிவசேனாவும் கணிசமான பஞ்சாயத்துக்களை கைப்பற்றி பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது. இரண்டாயிரத்து 800 பஞ்சாயத்துக்கள் வரை சிவசேனா கைப்பற்றியுள்ளது. மற்றொரு பெரிய கட்சியான சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாயிரத்து 700-க்கும் குறையாமல் பஞ்சாயத்துக்களை வென்றிருக்கிறது.
5 மாநில சட்டசபைத் தேர்தல்... காங்கிரஸ் கட்சிக்கு கஷ்டம் தான்... ஏபிபி சி-வோட்டர் அதிரடி சர்வே..!
இந்த முடிவுகள் அனைத்தும் இரவு 11 மணி நிலவரப்படி மட்டுமே. இன்னும் முடிவுகள் வெளியாகி வருவதால் தேர்தல் நடைபெற்ற 14,234 கிராம பஞ்சாயத்துகளில் எந்தக் கட்சி அதிக இடங்களில் கைப்பற்றும் என்ற விவரத்தை தற்போது விவரிக்க இயலாது.
ஆனால் இந்த மூன்று கட்சிகளுக்கு இடையே பெரியளவில் எண்ணிக்கையில் வேறுபாடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே காங்கிரஸ் 1905 பஞ்சாயத்துகள் வரை தான் இதுவரை வென்றிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்னும் முடிவுகளை அறிவித்து வருவதால் அந்த எண்ணிக்கை இன்னும் சற்று உயரக்கூடும் எனத் தெரிகிறது.