கொரோனா ஆட்டம் அதிகம்.. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உடனே தடுப்பூசி போடுங்க.. மகாராஷ்டிரா கோரிக்கை!
மும்பை: மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகரித்து வருவதால் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நோய் தடுப்புக்கான முதன்மை கருவி நம்மிடம் இருக்கும்போது, தடுப்பூசி நிறுவனங்கள் போதுமான உற்பத்தியை மேற்கொள்வதாக நமக்கு உறுதியளித்துள்ளபோது, மத்திய அரசு வேகமாக செயல்பட வேண்டும் என்று மாநில தொழில்நுட்ப ஆலோசகர் டாக்டர் சுபாஷ் சலுங்கே கூறினார்.
இந்தியாவில் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வந்தது. மகாராஷ்டிராவில் முதலில் கட்டுக்கடங்காமல் ஆடிய கொரோனா பின்னர் அடங்கியது. இந்த நிலையில் அங்கு மீண்டும் கொரோனா ஆட்டம் காட்டி வருகிறது. சுமார் 3 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 6,000-க்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால் நாக்பூர் உள்ளிட்ட சில இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கொரோனாவை விரட்டுவதற்காக இந்தியாவில் கோவோக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மருத்துவ, சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகரித்து வருவதால் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்து. இது தொடர்பாக மாநில தொழில்நுட்ப ஆலோசகர் டாக்டர் சுபாஷ் சலுங்கே கூறியதாவது:- மகாராஷ்டிராவில் கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதை அடுத்து 50 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசிடம் அனுமதி பெற மாநில அரசு முடிவு செய்துள்ளது.
நோய் தொற்று அதிகரித்து வரும் வேளையில் 50 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு மார்ச் வரை காத்திருக்க கூடாது. நோய் தடுப்புக்கான முதன்மை கருவி நம்மிடம் இருக்கும்போது, தடுப்பூசி நிறுவனங்கள் போதுமான உற்பத்தியை மேற்கொள்வதாக நமக்கு உறுதியளித்துள்ளபோது, மத்திய அரசு கால தாமதம் செய்யாமல் வேகமாக செயல்பட வேண்டும். மோசமான திட்டமிடல் மற்றும் பொருத்தமற்ற பொது சுகாதார கட்டமைப்பு மத்திய அரசே பொறுப்பு என்று சுபாஷ் சலுங்கே கூறினார்.