மகாராஷ்டிராவில் பள்ளிகள், கல்லூரிகளில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு
மும்பை: மகாராஷ்டிராவில் பள்ளிகள், கல்லூரிகளில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநில சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் அண்மையில் ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்ட மேலவையில் காங்கிரஸ் எம்.எல்.சி. சரத் ரன்பைசி எழுப்பிய கேள்விக்கு அமைச்சரும் மூத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நவாப் மாலிக் அளித்த பதில்:
மாநிலத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய சட்டசபை கூட்டத் தொடர் முடிவதற்குள் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்னர் இது தொடர்பான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். முந்தைய பாஜக அரசில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும் கூட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இவ்வாறு நவாப் மாலிக் தெரிவித்தார்.
சிஏஏவிற்கு ஆதரவாக பிரச்சாரம்.. திருப்பூர், தேனியை அதிர வைத்த பாஜக பேரணி.. திமுகவிற்கு எதிராக கோஷம்!
இதையடுத்து விரைவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை மகாராஷ்டிரா அரசு கொண்டுவரும் என தெரிகிறது. மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 16% இடஒதுக்கீடு வழங்கியது முந்தைய பாஜக-சிவசேனா கூட்டணி அரசு. இதில் தலையிட்ட மும்பை உயர்நீதிமன்றம், இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்றுக் கொண்ட போதும் அதை 13%ஆக குறைத்தது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப் படி, இடஒதுக்கீடு 50%-க்கு அதிகமாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் 13% இடஒதுக்கீட்டை மும்பை உயர்நீதிமன்றம் நிர்ணயித்திருந்தது.