வெயிட் பண்ணுங்க.. மீட்டிங் முடிச்சிட்டு பேசலாம்.. சிவசேனாவை அலைய விடும் சரத் பவார்!
சிவசேனாவின் மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எந்த கோரிக்கையும் நான் வைக்கவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மும்பை: சிவசேனாவின் மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எந்த கோரிக்கையும் நான் வைக்கவில்லை, அக்கட்சியுடன் கூட்டணி வைப்பது பற்றி யோசித்துதான் முடிவு செய்வோம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைப்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பெரிய கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை.
மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 104 இடங்களை வென்றது. அதனால் சிவசேனாவிற்கு பெரிய அளவில் பெரும்பான்மை கிடைக்கும்.
இன்று ஆலோசனை
இந்த நிலையில் சிவசேனாவிற்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் இன்று ஆலோசனை நடத்த உள்ளது. இன்னும் 30 நிமிடத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஆலோசனை செய்ய உள்ளனர். சிவசேனாவுடன் கூட்டணி வைத்தால் அது நீடிக்குமா என்று ஆலோசிக்க உள்ளனர்.
கோரிக்கை
நேற்று இரவே சிவசேனாவின் மூத்த தலைவர் நவாப் மாலிக் அளித்த பேட்டியில், சிவசேனா பாஜகவுடன் இருக்கும் தொடர்பை துண்டிக்க வேண்டும். பாஜகவுடன் எந்த உறவையும் சிவசேனா கொள்ள கூடாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினால் சிவசேனாவிற்கு ஆதரவு. மத்திய அமைச்சரவையில் இருக்கு சிவசேனா அமைச்சர்கள் எல்லோரும் பதவி விலக வேண்டும், என்று குறிப்பிட்டார்.
அப்படியே செய்தார்
தேசியவாத காங்கிரஸ் சொன்னது போலவே சிவசேனாவை சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் மோடி அமைச்சரவையிலிருந்து இன்று காலை வெளியேறவுள்ளதாக அறிவித்துள்ளார். ஆக மொத்த தேசியவாத காங்கிரஸ் வைக்கும் எந்த கோரிக்கையையும் ஏற்க தயாராக சிவசேனா இருப்பது புலனாகிறது.
சரத் பவார் முடிவு
இந்த நிலையில் சிவசேனாவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் என்று மும்பையில் பேட்டி அளித்தார். அதில், மகாராஷ்டிராவில் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அவசரமாக முடிவு எடுக்க முடியாது.
காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சியுடன் பேசிய பிறகே முடிவு செய்யப்படும். சிவசேனாவிற்கு ஆதரவு தருவது குறித்து ஆலோசித்து வருகிறோம். சிவசேனா எம்எல்ஏக்கள் யாரையும் பதவி விலகும்படி நாங்கள் கூறவில்லை. எங்கள் கட்சி சார்பாக அதிகாரபூர்வ கோரிக்கை எதையும் வைக்கவில்லை, என்று குறிப்பிட்டுள்ளார்.