சூர்யா மட்டும்தானா சூரர்?.. இவரையும் போற்றுவோம்.. மனித குலத்தின் மகாராஷ்டிர பெண்ணின் பெருமை!
மும்பை: சூர்யாவை மட்டும்தான் போற்ற வேண்டுமா, குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு நர்மதை ஆற்றை கடந்து சென்று ஊட்டச்சத்து உணவை வழங்கி வரும் இந்த மனிதகுலத்தின் பெண்ணின் பெருமைகளையும் போற்றுவோம்!
மகாராஷ்டிரா மாநிலம் நந்தர்பார் மாவட்டம் சிமல்காடி என்ற பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேலு வசாவே. இவர் அங்கன்வாடி பணியாளராக உள்ளார். புதிதாக பிறந்த குழந்தைகள் முதல் 6 வயது நிரம்பியவர்கள் வரை உடல்நலத்துடன் இருக்கிறார்களா என பார்ப்பது ரேலுவின் வேலையாகும்.
அது மட்டுமல்ல கருவுற்றிருக்கும் பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து மருந்துகளும் கிடைக்கின்றனவா என கண்காணித்து அவற்றை பயனாளிகளுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும்.
நர்மதை ஆறு
இதற்காக நர்மதை ஆற்றங்கரையிலிருந்து சிமல்காடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு கர்ப்பிணிகளும் குழந்தைகளும் படகில் வந்து உணவு வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா அச்சத்தால் அங்கன்வாடிக்கு யாரும் வருவதில்லை.
7 கர்ப்பிணிகளுக்கு
இதனால் ரேலு கவலையடைந்தார். இதையடுத்து ஒரு மீனவரின் படகை வாடகைக்கு எடுத்தார். பின்னர் ஊட்டச்சத்து உணவுகளையும் குழந்தைகளின் எடையை அளக்கும் இயந்திரத்தையும் ஏற்றிக் கொண்டு காலை 7.30 மணிக்கு கிளம்பிய ரேலு, 18 கி.மீ. பயணம் செய்து 25 பச்சிளம் குழந்தைகள், நலிவுற்ற குழந்தைகள், 7 கர்ப்பிணிகளுக்கு தேவையான உணவை அளித்து வருகிறார்.
பொருட்கள்
படகில் சென்றாலும் கரை வந்தவுடன் பொருட்களை எடுத்துக் கொண்டு மலையில் ஏறி கிராமங்களை சென்றடைய வேண்டும். ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் 5 நாட்கள் முதல் இன்று வரை இந்த உதவியை தொடர்ந்து செய்து வருகிறார். ஆனால் நர்மதை ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்த ஜூலை மாதத்தில் மட்டும் அவரால் கிராமங்களுக்கு செல்ல முடியவில்லை.
ஊட்டச்சத்து
இதுகுறித்து ரேலு கூறுகையில் ஒவ்வொரு நாளும் படகை இயக்குவது எளிதல்ல. மாலையில் நான் திரும்பி ஊருக்கு வருவதற்குள் கைகள் அசந்து போகும். ஆனால் அதை பற்றியெல்லாம் நான் கவலைப்பட்டதில்லை. குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் ஊட்டச்சத்து கிடைப்பதுதான் முக்கியம். இதை நிச்சயம் செய்வேன் என்றார்.