இடஒதுக்கீடு கோரி போராடிய மராத்தா இளைஞர்கள் 3,000 பேர் மீதான 288 வழக்குகள் வாபஸ்- உத்தவ் தாக்கரே
மும்பை: இடஒதுக்கீடு கோரி போராடிய மராத்தா இளைஞர்கள் 3,000 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை கைவிடுவது என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மராத்தா ஜாதியினர் இடஒதுக்கீடு கோரி போராட்டங்களை நடத்திய போது கீழ்நீதிமன்றத்தில் 288 வழக்குகளை அரசு தொடர்ந்தது. இந்த வழக்குக்ளை கைவிடுவது என தற்போதைய அரசு முடிவு செய்துள்ளது.
3,000 மராத்தா ஜாதி இளைஞர்கள் மீது இந்த 288 வழக்குகள் போடப்பட்டிருந்தது. அதேபோல் நானார் எண்ணெய் சுத்தகரிப்பு ஆலைக்கு எதிரான போராட்டம், மெட்ரோ-3வது திட்டத்துக்கு எதிரான போராட்டம், பீமா கோரேகான் வன்முறை, விவசாயிகள் போராட்டங்கள் ஆகியவை தொடர்பான பல வழக்குகளையும் கைவிட உத்தவ் தாக்கரே அரசு முடிவு செய்திருக்கிறது.
சிசிடிவி காட்சிகள், நேரடி சாட்சியங்கள் என வலுவான வழக்குகளை மட்டும் நடத்துவது எனவும் அம்மாநில அரசு தீர்மானித்துள்ளதாம். இடஒதுக்கீடு போராட்டத்தின் போது போலீசார், அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட 35 வழக்குகளை கைவிடுவது இல்லை எனவும் மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. 370 மராத்தா ஜாதி இளைஞர்கள் மீது இந்த 35 வழக்குகள் போடப்பட்டுள்ளன.