'மகாத்மா' சோனு சூட் - செய்யவும் வக்கில்லை.. வாய்சவடாலுக்கும் குறைவு இல்லை..லந்தடிக்கிறது சிவசேனா
மும்பை: மகாராஷ்டிராவில் பரிதவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இடம்பெயர் தொழிலாளர்களை சொந்த செலவில் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கும் பாலிவுட் நடிகர் சோனு சூட்டை மகாத்மா என கிண்டலடித்திருக்கிறது ஆளும் சிவசேனா கட்சி.
தமிழ் திரைபடங்களில் வில்லனாக நடித்தவர் சோனு சூட்.. இன்று மகாராஷ்டிரா வாழ் தமிழர்களுக்கு மத்தியில் நிஜ நாயகனாக போற்றப்படுகிறார்.
இதற்கு காரணம், கொரோனா லாக்டவுனால் பரிதவித்த தங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி சொந்த ஊர்களுக்கு சொந்த செலவில் அனுப்பி வைத்தார் சோனு சூட். இதனால்தான் அவரை நாயகனாகவே கொண்டாடுகின்றனர் தமிழர்கள் உள்ளிட்ட மகாராஷ்டிரா வாழ் இடம் பெயர் தொழிலாளர்கள்.
"உம்"முனு இருக்கும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் "ஜம்மு"னு ஜொலிக்கும் சோனு.. இவர்தான் சூப்பர் ஹீரோ!
மகத்தான மக்கள் பணி
ஒரு தனிமனிதனாக தம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்கிற பரந்த மனதுடன் சோனு சூட் களமிறங்கி பணியாற்றுகிறார். இளம்பிராயத்தில் தாம் எதிர்கொண்ட துயரங்களை தம் கண்முன்னே மற்றவர்களும் அனுபவித்துவிடக் கூடாதே என்கிற பதைபதைப்பில்தான் சோனு சூட் மகத்தான பணியாற்றி வருகிறார்.
பாய்ந்து பிராண்டும் சிவசேனா
இது ஒன்று போதாதா அரசியல் கட்சி தலைவர்களுக்கு வயிற்றெரிச்சல் வருவதற்கு.. இதனால்தான் சோனு சூட் மீது பாய்ந்து பிராண்டியிருக்கிறது மகாராஷ்டிராவின் ஆளும் சிவசேனா கட்சி. லாக்டவுனின் பசியாலும் பட்டினியாலும் உயிருக்கு போராடும் மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து மகாராஷ்டிராவின் ஆளும் சிவசேனா அரசு தவறிவிட்டது. இதனால்தான் சோனு சூட் போன்ற நாயகர்கள் களமிறங்கினார்கள் என்பதுதான் யதார்த்தம்.
பதவி வெறியாளர் ராவத்
இதனைவிட்டுவிட்டு சோனு சூட் ஒரு மகாத்மாவாகிறார் என கிண்டலடித்திருக்கிறது சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னா. இப்படி மனம்போக போக்கில் எழுதிருப்பவர் சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தான். உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் சகோதரருக்கு இடம்கிடைக்கவில்லை என்பதற்காக அக்கப்போர் நாடகங்களை நடத்திய சஞ்சய் ராவத் வகையறாக்களுக்கு எளியவர்களின் வலியை சோனு சூட் போன்றவர்கள் உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எரிச்சல்வரத்தானே செய்யும்.
பாஜகவில் இணையப் போவது இல்லையாம்
அண்மையில் மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரியை சோனு சூட் சந்தித்து பேசியிருந்தார். அப்போது தம்மால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நிவாரணப் பணிகளையும் கோஷ்யாரியிடம் விவரித்தார் சோனு சூட். உடனே அவர் பாஜகவில் இணையப் போவதாக வதந்திகள் கிளப்பிவிடப்பட்டன. இவை அனைத்தையும் சோனு சூட் நிராகரித்திருந்த நிலையில்தான் சிவசேனாவும் சஞ்சய் ராவத்துகளும் அவரை விமர்சிக்க வந்துவிட்டனர்.
Recommended Video
படிப்பினைகள் வெயிட்டிங்
மேலும் விரைவில் சோனு சூட், பிரதமர் மோடியை சந்தித்து உரையாடுவார். இதன் மூலம் மகாராஷ்டிராவின் பிரபலங்களில் ஒருவராகவும் வலம் வருவார் என்றெல்லாம் போகிற போக்கில் இழிவுபடுத்தியிருக்கிறது சிவசேனாவின் சாம்னா. வறுமையில் வாடும் மக்களின் இன்னலைப் போக்க துரும்பையும் கிள்ளிப்போடாத சஞ்சய் ராவத்களுக்கு சோனு சூட்டின் எளிய மனிதர்களுக்கான உதவியை விமர்சிக்கவோ குறைசொல்லவோ துளியும் அருகதை இல்லை.. இப்படியான நாலாந்தர அரசியல்வாதிகளுக்கு ஜனநாயகம் எத்தனையோ படிப்பினைகளை கொடுத்திருக்கிறது என்பதை சிவசேனாவும் சஞ்சய் ராவத்துகளும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.