பாஜகவுக்கு செக்.. மம்தாவின் புது வியூகம்.. விழித்து பார்க்கும் காங்கிரஸ்.. பரபரக்கும் தேசிய அரசியல்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போது இல்லை என்று மம்தா தெரிவித்துள்ளார்
மும்பை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போதைக்கு இல்லை என்று மூத்த தலைவர் சரத்பவாருடனான சந்திப்புக்கு பிறகு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.. இது காங்கிரஸ் மேலிடத்துக்கு கலக்கத்தை தந்துள்ளது.
2024-ம் ஆண்டில் நடக்க போகும் எம்பி தேர்தலுக்கு இப்போதே தேசிய அரசியல் தயாராகி வருகிறது.. அந்த தேர்தலை கணக்கு செய்து, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடந்த 6 மாதங்களாகவே ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக பல்வேறு தலைவர்களையும் சந்தித்து பேசிவருகிறார்.. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்துக்கும் சென்றுள்ளார்.. சஞ்சய் ராவுத், ஆதித்யா தாக்கரே போன்றோரை சந்தித்து பேசினார்..
நாடாளுமன்றத்தை 3-வது நாளாக முடக்கிய எதிர்க்கட்சிகள்.. வெல்கிறதா சோனியாவின் வியூகம்?
சரத்பவார்
அதேபோல சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் சந்திக்க முடிவு செய்தார்.. ஆனால் அவருக்கு உடம்பு சரியில்லாமல் சிகிச்சையில் உள்ளதால் அவரை சந்திக்கவில்லை.. ஆனால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு மம்தா செய்தியாளர்களிடம் பேசும்போது, "இப்போது இனவாத சூழ்நிலை நிலவுகிறது... இதற்கு எதிரான வலுவான மாற்று ஒன்று தேவை. ஆனால், அதை தனியாக யாராலும் செய்ய முடியாது.. சரத்பவார் ஒரு மூத்த அரசியல் தலைவர்.. அரசியல் கட்சிகளின் நிலை குறித்து அவரிடம் விவாதித்தேன்.. சரத்பவாரின் கருத்துக்களை தாம் ஏற்றுக் கொள்கிறேன்.. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி இல்லை" " என்றார்.
காங்கிரஸ்
கடந்த சில நாட்களாகவே, மத்தியில் அமையும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்பதை மம்தா விரும்பவில்லை என்று செய்திகள் வெளியாகி வந்தன.. அதற்கேற்றார் போல், ஏற்கெனவே டெல்லி சென்றிருந்த மம்தா, பல தலைவர்களை சந்தித்தாரே தவிர, சோனியா காந்தியை சந்திக்கவில்லை.. இதை பற்றி செய்தியாளர்கள் அப்போது கேட்டதற்கு, ஒவ்வொரு முறை டெல்லி வரும்போதெல்லாம் சோனியா காந்தியைச் சந்திக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லையே என்றார்.
மம்தா பானர்ஜி
அப்போதே காங்கிரஸை மம்தா, ஓரங்கட்ட நினைத்துவிட்டதாகவும் கருதப்பட்டது.. இதைதவிர, காங்கிரஸி கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்களையும் தங்கள் கட்சி பக்கம் இழுக்கும் முயற்சியிலும் மம்தா மும்முரமாகி வருகிறார்.. இனி காங்கிரஸை நம்பினால் வேலைக்கு ஆகாது என்று நினைத்துவிட்டாரோ என்னவோ, தானோ நேரடியாகவே பாஜகவிடன் மோத முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
காங்கிரஸ்
இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய ஷாக் ஆகத்தான் இருக்கும்.. சமீபத்தில்கூட மேகாலாயா முன்னாள் முதல்வர் முகுல்சங்மா உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் திரிணமூல் கட்சியில் சேர்ந்தது, காங்கிரசுக்கு அதிர்ச்சிதான்.. கோவா, அசாம் என காங்கிரஸ் சீனியர்கள் அப்படியே மம்தா பக்கம் தாவி வருவதும் கூடுதல் அதிர்ச்சியை தந்து வந்த நிலையில், இப்போது அடுத்த ஜெர்க்கை மம்தா காங்கிரசுக்கு தந்துள்ளார்.. இதை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது!