மகாராஷ்டிராவில் அதிர்ச்சி: தடுப்பூசி 2-வது டோஸை பெற்ற சுகாதார பணியாளர் உயிரிழப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி 2-வது டோஸை பெற்ற சுகாதார பணியாளர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுகாதார பணியாளர் சுக்தேவ் கிர்தாத்,2-வது டோஸ் எடுத்துக் கொண்ட 15 நிமிடங்களில் மயக்கம் அடைந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சுக்தேவ் கிர்தாத் ஒரு மாதத்திற்கு முன்பு முதல் டோஸை எடுத்துக் கொண்டார். அப்போது அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவில் ஓரளவு கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஐஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா மீண்டும் தலைதூக்கியுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி
நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி 2-வது டோஸை பெற்ற சுகாதார பணியாளர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண் நிபுணருக்கு ஓட்டுநராக பணிபுரியும் பிவாண்டியைச் சேர்ந்த சுக்தேவ் கிர்தாத்,2-வது டோஸ் எடுத்துக் கொண்ட 15 நிமிடங்களில் கண்காணிப்பு அறையில் மயக்கம் அடைந்தார்.
தடுப்பூசி போட்டவர் சாவு
உடனடியாக அவரை சிகிச்சைக்காக இந்திரா காந்தி நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரித்தனர். சுக்தேவ் கிர்தாத் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு தெளிவான காரணம் கிடைக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
டாக்டர்கள் விளக்கம்
உயிரிழந்த சுக்தேவ் கிர்தாத் ஒரு மாதத்திற்கு முன்பு முதல் டோஸை எடுத்துக் கொண்டார். அப்போது அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தற்போது 2-வது டோஸுக்கு முன்பு அவருக்கு முழு பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு பல ஆண்டுகளாக இரத்த அழுத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அடி வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தன என்றும் டாக்டர்கள் கூறினர்.