13 பேரை கொன்ற ஒரு புலி.. 2 மாத தேடுதல் வேட்டையில் 150 பேர்.. அதிரவைக்கும் ஆபரேஷன் அவ்னி!
அவ்னி என்ற புலியை பிடிப்பதற்காக மகாராஷ்டிரா அரசு கடந்த 2 மாதமாக கஷ்டப்பட்டு வருகிறது.
மும்பை: அவ்னி என்ற புலியை பிடிப்பதற்காக மகாராஷ்டிரா அரசு கடந்த 2 மாதமாக கஷ்டப்பட்டு வருகிறது.
இணையத்தில் அதிகம் உலவும் நபர்கள் #operationavni மற்றும் #saveavni என்ற இரண்டு ஹேஸ்டேக்குகளை கண்டிப்பாக கடந்து வந்து இருப்பார்கள். இந்தியாவில் நடக்கும் ஒரு புலி வேட்டை குறித்து உலக நாடுகள் முழுக்க பேசப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவை அச்சத்தில் உள்ளாக்கி இருக்கும் அவ்னி புலிதான் அது. இந்த புலியை கொலை செய்ய மகாராஷ்டிரா அரசு மிகப்பெரிய தனிப்படையை உருவாக்கி உள்ளது.
டி- 1 புலி
மகாராஷ்டிரா வனத்துறையின் ஆவணங்களின் படி, இந்த புலியின் பெயர் டி-1 புலி. இதன் எடை சுமார் 300 பவுண்டுகள் இருக்கும். தற்போது இதற்கு 6 வயதாகிறது. மகாராஷ்டிராவில் உள்ள அடர்த்தியான காடுகளில் ஒன்றான யவாட்டமால் காட்டில்தான் இந்த புலி வசித்து வருகிறது.
அவ்னி என்றால் என்ன
ஆனால் இதற்கு, ஆதரவாக இருக்கும் மக்கள் இந்த புலிக்கு வைத்து இருக்கும் பெயர் அவ்னி. ஆம் அவ்னி என்று செல்ல பெயர் வைத்து இருக்கிறார்கள். அவ்னி என்றால் பூமி என்று அர்த்தம். இந்த அவ்னி புலி பெண் புலியாகும். இதற்கு 2 குட்டிகள் இருக்கிறது.
13 பேர் கொலை
இந்த புலிக்கு இன்னொரு முகம் இருக்கிறது. கடந்த 2 வருடத்தில் இந்த புலி மொத்தம் 13 மனிதர்களை கொலை செய்து இருக்கிறது. டிஎன்ஏ ஆய்வுகளின்படி, இந்த புலிதான் காட்டுகளில் இந்த 13 பேரை கொலை செய்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 5 கொலைகள் அவ்னிதான் செய்தது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மோசமாக கடித்து கொலை செய்து இருக்கிறது.
என்கவுண்டர் செய்ய உத்தரவு
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் இதை பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எங்கு இருந்தாலும் இதை சுட்டு பிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் இதற்காக களமிறக்கப்பட்டனர். இதற்கு ஆபரேஷன் அவ்னி என்று பெயர் வைக்கப்பட்டது.
நீதிமன்ற என்ன சொன்னது
ஆனால் இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வரை இந்த வழக்கு விசாரணைக்கு சென்றது. கடைசியில் இந்த வழக்கு விசாரணையின் முடிவில் அவ்னியை சுட்டு பிடிக்க தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
எத்தனை பேர்
நீதிமன்றம் பச்சை கொடி காட்டியதும் இந்த புலியை தேடும் பணி தீவிரம் அடைந்தது. அதன்படி, 150 பேர் வனக்காவல் படையில் இருந்து களமிறக்கப்பட்டனர். 150 பேரும் கடந்த 2 மாதமாக காட்டுப்பகுதியில் அவ்னி புலியை தேடி சுற்றி வருகிறார்கள். அதை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உபகரணம் என்ன?
இதையடுத்து இந்த அவ்னியை பிடிக்க 100க்கும் அதிகமான கேமராக்கள் அந்த காட்டில் பொருத்தப்பட்டு இருக்கிறது. 50க்கும் அதிகமான மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 20 யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இல்லாமல் தனியார் அங்கு வைத்திருக்கும் ஆராய்ச்சி கருவிகள், சிக்னல் ஸ்கேன் கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
களமிறக்கப்பட்டார்
இந்த நிலையில் இவ்வளவு பேர் முயன்றும் அந்த புலியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் நவாப் ஷாபாத் அலி கான் என்ற வேட்டை வல்லுனரை களமிறக்கி இருக்கிறது மகாராஷ்டிரா அரசு. அவர் இதற்கு முன் பல மாநில அரசுகளின் அழைப்பின் பெயரில், மோசமான விலங்குகளை வேட்டையாடி இருக்கிறார். அதனால் அவரை களமிறக்கி உள்ளனர்.
கடும் எதிர்ப்பு
இந்த நிலையில் அவ்னியை கொல்ல கூடாது என்று கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதற்காக சேவ் அவ்னி என்று ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. விலங்குகள் நல ஆர்வலர்கள் இதற்காக குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் அரசு இந்த எதிர்ப்புகளை கண்டுகொள்வதாக தெரியவில்லை.