பக்கத்து வீட்டு நாய்க்குட்டியைக் காப்பாற்ற முயன்ற தம்பி.. ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற அண்ணன்!
நாய்க்குட்டிக்காக ஏற்பட்ட சண்டையில் தம்பியைக் கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை: பக்கத்து வீட்டு நாயைக் காப்பாற்ற முயற்சித்ததால், ஆத்திரத்தில் உடன்பிறந்த தம்பியை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் விலே பார்லே பகுதியைச் சேர்ந்தவர் ஹனுமந்தா கோலீகார் (50). சம்பவத்தன்று இவர் பக்கத்து வீட்டு நாய்க்குட்டியை கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது அங்கு வந்த அவரது தம்பி, சிவா கோலீகார், நாய்க்குட்டி மீது இரக்கம் கொண்டு அதனைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார்.
இதனால் ஹனுமந்தாவின் கோபம், சிவா மீது திரும்பியது. நாய்க்குட்டியை அடிக்க விடாமல் தடுத்த தம்பியை தள்ளி விட்டுள்ளார். இதில் மாடியில் இருந்து தவறி விழுந்த சிவா, பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ஹனுமந்தாவைக் கைது செய்தனர். சிவாவின் மரணம் விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாய்க்குட்டிக்காக ஏற்பட்ட சண்டையில் தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.