உத்தவ் தாக்கரேவை இழிவுப்படுத்தி கருத்து.. இளைஞரை அடித்து நொறுக்கி மொட்டை அடித்த சிவசேனா கட்சியினர்!
மும்பை: மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை இழிவுப்படுத்தி பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த மும்பை வடலாவைச் சேர்ந்த இளைஞர் சிவசேனா தொண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
இந்த சம்பவம் வடாலா கிழக்கின் சாந்தி நகர் பகுதியில் நடந்தது. தற்போதுதான் இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது.
தாக்கப்பட்ட நபர் யார் என்பது குறித்த அடையாளம் தெரியவந்துள்ளது. ஹிராமணி திவாரி என்ற அந்த நபர், டிசம்பர் 20 ம் தேதி டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் போலீஸ் நடவடிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியதற்கு எதிராக அவதூறான கருத்தை தனது பேஸ்புக்கில் வெளியிட்டார்.
மொட்டை அடித்தனர்
இந்த பதிவினை பார்த்து கொதித்து போன சிவசேனா தொண்டர்கள் சிலர், ஞாயிற்றுக்கிழமை மும்பை வடலா கிழக்கில் உள்ளி ஹிராமணி திவாரி இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர். அவரை வீட்டு வெளியே இழுத்து வந்த சிவசேனா தொழிலாளர்கள் திவாரியை சரமாரியாக தாக்கினர். அதன் பின்னர் பலவந்தமாக அவரது தலையை மொட்டையடித்து விட்டனர். இந்த காட்சி அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வழக்கு போடப்படும்
இந்த சம்பவம் பூதாகரமாக மாறிய நிலையில், வராலா டிடி காவல் நிலையம் ஹிராமணி திவாரி மற்றும் சிவசேனா தொண்டர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். அதில் "இரு தரப்பினரும் தங்கள் வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடித்து பராமரிக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால் , அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் மற்றும் அவர்களுக்கு எதிராக பொருத்தமான பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவினை நீக்கிவிட்டேன்
செய்தியாளர்களிடம் பேசிய ஹிராமணி திவாரி, "உத்தவ் தாக்கரே குறித்து ஒரு கருத்தை வெளியிட்ட பிறகு, எனக்கு மிரட்டல்கள் வந்தது. அதைத் தொடர்ந்து நான் அந்த பதிவினை நீக்கினேன். ஞாயிற்றுக்கிழமை, சில சிவசேனா தொண்டர்கள் எனது இல்லத்திற்கு வந்து என்னை வெளியே வரச் சொன்னார்கள். அவர்கள் தாக்கத் தொடங்கினர். என்னை துன்புறுத்தி என் தலையை மொட்டையடித்தனர்.
போலீஸ் நோட்டீஸ்
அவர்கள் தாக்கியதில் எனது காதுகுழாய் சேதமடைந்துள்ளதாக மருத்துவர்கள் சிவசேனா கட்சியினர் செயல்படும் முறை மிகவும் ஆபத்தானது. காவல்துறை ஆரம்பத்தில் எனது புகாரை எடுத்துக் கொண்டது, ஆனால் பின்னர் சிஆர்பிசி பிரிவு 149 ன் கீழ் எங்களுக்கு நோட்டீஸ் வழங்கியது. நான். என்னைத் தாக்கிய சிவசேனா தொழிலாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன்.
சிஏஏ சட்டம்
ஹிராமணி திவாரி முன்னதாக விஸ்வ இந்து பரிஷத்தில் இருந்துள்ளார். அதன்பின்னர் பஜ்ரங் தளம் மற்றும் பாரதீய ஜனதா (பிஜேபி) ஆகியவற்றின் ஆதரவாளராக மாறியதாக கூறினார். சனிக்கிழமை தாதரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) ஆதரிப்பதாக திவாரி கூறியிருக்கிறார்.