சரியும் பொருளாதாரம்.. பிரச்சினை என்ன என்பதே அரசுக்கு புரியவில்லை.. களத்துக்கு வந்தார் மன்மோகன் சிங்
Recommended Video
மும்பை: பொருளாதாரத்தில் என்ன பிரச்சினை என்பதே மத்திய அரசுக்கு தெரியவில்லை என்று, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டினார்.
மகாராஷ்டிராவில் வரும் 21ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மும்பை வந்திருந்தார், மன்மோகன் சிங். அப்போது அவர் கூறியதாவது:
தற்போதைய பொருளாதார மந்தம் மற்றும் அதை சமாளிக்க திறமையற்ற அரசு ஆகியவை இணைந்து இந்த நாட்டு மக்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பொருளாதார மதத்தின் காரணமாக, மகாராஷ்டிரா, அதிலும் குறிப்பாக மும்பை, நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகப்படியான தொழிற்சாலைகள் மூடப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா. கடந்த ஐந்து ஆண்டுகளில் 1 லட்சத்து 22 ஆயிரம் கோடி மதிப்புக்கும் மேல் சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
Former PM Dr Manmohan Singh, in Mumbai, on PMC bank matter: It's very unfortunate what has happened in the case of this bank. I appeal to the Maharashtra CM, the PM & the Finance Minister to look into this matter and resolve the grievances of the affected 16 Lakh people. pic.twitter.com/TIeNWFJJEb
— ANI (@ANI) October 17, 2019
நாசிக், அவுரங்காபாத், நாக்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளிலும், சீனா இறக்குமதி அதிகரிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புறங்களில் மூன்றில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது, இதனால் குறைந்த சம்பளம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று நமது இளைஞர்கள் கிடைத்த வேலையில் சேர்ந்து வருகிறார்கள்.
கிராமப்புறங்களில் வேலை இல்லாத் திண்டாட்டம் காரணமாக, ஊர்களை காலி செய்து மக்கள் வெளியேறும் போக்கு அதிகரித்துள்ளது. ஒரு காலகட்டத்தில் அதிகப்படியான முதலீடுகளை ஈர்ப்பதில், மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் இருந்தது. இப்போது விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதில் முதலிடத்தில் உள்ளது.
மத்திய அரசின் இறக்குமதி-ஏற்றுமதி கொள்கைகளாலும், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனைகளை சீக்கிரம், சரி செய்யாவிட்டால், நாட்டு மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். துரதிருஷ்டவசமாக, மத்திய மற்றும் மகாராஷ்டிர மாநில பாஜக அரசுகள் மக்கள் நலத் திட்டங்களை கையில் எடுக்கவில்லை.
பொருளாதாரத்தை சரி செய்ய வேண்டும் என்றால் பிரச்சனை என்ன என்பதை சரியாக புரிந்து வைத்திருக்க வேண்டும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடும் அறிவிப்புகளை பார்த்தால், பிரச்சினை என்ன என்பது அரசுக்கு தெரியவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டுகிறார்களே, தவிர பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை. பிரச்சனைகள் என்ன என்று தெரியாமல் இவர்களால் தீர்வு காணவும் முடியாது.
மகாராஷ்டிரா பிஎம்சி வங்கி பிரச்சினையை உடனடியாக சரி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்தார். வங்கிகள் பிரச்சினைக்கு, மன்மோகன் சிங்தான் காரணம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த நிலையில், மன்மோகன் சிங் அதற்கு பதிலடியாக இவ்வாறு கூறியுள்ளார்.