ஆம்புலன்ஸ் தாமதம்.. நடிகையும் அவருக்கு பிறந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழப்பு
Recommended Video
மும்பை: ஆம்புலன்ஸ் கிடைக்காமல் போனதால் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட நடிகையும் அவருக்கு பிறந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து 600 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மாவட்டம் ஹிங்கோலி. இங்குள்ள கோரேகான் பகுதியைச் சேர்ந்தவர் பூஜா ஸூன்ஜார் வயது 25. இவர் மாரத்தியில் இரண்டு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஆவார். சில காலமாக பிரசவத்திற்காக ஓய்வில் இருந்தார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பூஜாவுக்கு கடந்த ஞாயிறு அன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை உடனே அருகில் உள்ள கேரேகான் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
மேல் சிகிச்சை
ஆனால் அவரது உடல் நிலை மற்றும் குழந்தையின் உடல் நிலை மோசமாக இருந்துள்ளது.இதையடுத்து அங்கிருந்த மருத்துவர்கள் உடனடியாக உயர் சிகிச்சைக்காக கோரேகானில் இருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள ஹிங்கோலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு குடும்ப உறுப்பினர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.
குடும்பத்தினர் அதிர்ச்சி
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ்க்காக நீண்ட நேரம் போராடியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை.
குழந்தை சாவு
இந்நிலையில் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றை அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்து பூஜாவை ஏற்றிக்கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பூஜா ஸூன்ஜாரின் உயிர் பறிபோனது. இந்த சோகமாக சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகாராஷ்டிராவில் பரபரப்பு
ஆம்புலன்ஸ் தாமதத்தால் நடிகை மற்றும் அவருக்கு பிறந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்கு கிடைத்திருந்தால் இரண்டு உயிர்களையும் காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் சரியான நேரத்திற்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் போனதால் தாய் சேய் இருவரும் உயிரிழந்துவிட்டதாக அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.