மராத்தி பேசுவோர் வசிக்கும் கர்நாடகா பகுதிகளை யூனியன் பிரதேசமாக்க உத்தவ் தாக்கரே திடீர் கோரிக்கை
மும்பை: கர்நாடகாவில் மராத்தி மொழி பேசுவோர் வசிக்கும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனி யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா எல்லையில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. இது தொடர்பாக இரு மாநிலங்களில் நடைபெற்றும் போராட்டங்களால் பதற்றம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடகா- மகாராஷ்டிரா மாநில எல்லைகள் பிரச்சனை தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:
பெல்காம் பெயர் மாற்றம்
கர்நாடகாவுடனான எல்லை பிரச்சனைகள் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதே பெல்காமின் பெயரை கர்நாடகா அரசு மாற்றியிருக்கிறது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா?
சட்டசபை கட்டிடம்
பெல்காமின் பெயரை மாற்றியது மட்டும் இல்லாது அதை 2-வது தலைநகராகவும் கர்நாடகா அரசு அறிவித்திருக்கிறது. அங்கே சட்டசபை கட்டிடத்தை கட்டி சட்டசபை கூட்டத்தையும் கர்நாடகா அரசு நடத்தியிருக்கிறது. இது நீதிமன்ற அவமதிப்புக்குள் வராதா?
யூனியன் பிரதேச கோரிக்கை
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை கர்நாடகா ஆக்கிரமித்திருக்கும் மராத்தி மொழி பேசுவோர் வசிக்கும் பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும். கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு நாங்கள் வெல்வோம். கர்நாடகா ஆக்கிரமித்திருக்கும் மராத்தி மொழி பேசும் பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைத்தே தீருவோம்.
மகா. அமைப்பு மீது சாடல்
மகாராஷ்டிரா ஏக்கிரான் சமிதி பல எம்.எல்.ஏக்களை அந்த பகுதியில் பெற்றிருந்தது. இந்த அமைப்பை பலவீனமாக்கக் கூடாது என்பதற்காக அங்கே சிவசேனா அரசியல் செய்யாமல் இருந்தது. ஆனால் சுயநல அரசியலுக்காக மராத்தி மொழி பேசும் மக்களின் கோரிக்கைகளை அது நீர்த்து போகச் செய்துவிட்டது.
மராத்தியர்கள் மீது ஒடுக்குமுறை
மகாராஷ்டிராவில் அமைந்துள்ள மகா விகாஸ் அகாடி அரசு காலத்தில்தான் இந்த எல்லை பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். இந்த அரசின் ஆட்சிக் காலத்துக்குள் எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் போனால் எப்போதும் தீர்வு காணவே முடியாது. கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மராத்தி மொழி பேசும் மக்களை ஒடுக்கவே செய்கின்றனர். இதற்கு நாங்களே தீர்வு காண்போம். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.