16 வயசு சிறுமி.. சீரழித்த 25 வயது நபர்.. கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டதால் ஜாமீனில் விடுதலை!
மும்பை : 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கிய 25 வயது நபரை போக்சோ சட்டத்தின் கீழ் மும்பை கோர்ட் ஜாமினில் விடுதலை செய்துள்ளது. தான் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக அந்த நபர் கூறியதை அடுத்து ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
சிறுமியின் தந்தைக்கு பழக்கமானவரான, ஏற்கனவே திருமணமான 25 வயது நபர், அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அச்சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். கர்ப்பத்திற்கு தான் காரணம் என
யாரிடமும் சொல்லக் கூடாது என அச்சிறுமியை அந்த நபர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இருப்பினும் தனது மகளின் நடவடிக்கையில் வித்தியாசம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த சிறுமியின் தாய், மகள் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்டார். இதனையடுத்து சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் மீது அவர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து அக்டோர் 23 அன்று அந்தநபர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது, சிறுமியின் தாய், தனது மகளுக்கு குழந்தை பிறக்க உள்ளதால் அந்த நபரை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க தான் விரும்புவதாக கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இதனால் ஏற்கனவே ஜாமின் மனு நிராகரிக்கப்பட்ட அந்த நபருக்கு, தற்போது மும்பை கோர்ட் ஜாமின் வழங்கி உள்ளது.பாதிக்கப்பட்ட சிறுமியும், ஏற்கனவே திருமணமான குற்றம்சாட்டப்பட்ட நபரும் திருமணம் செய்து கொள்ள விரும்பி உள்ளனர். இருவரும் விருப்பத்தின் பேரிலேயே நெருக்கமான உறவு வைத்துக் கொண்டனர். அச்சிறுமிக்கு 18 வயது
நிறைவடைந்ததும் திருணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தது தெரிய வந்ததால் குற்றவாளிக்கு ஜாமின் வழங்குவதாக கோர்ட் தெரிவித்துள்ளது.
குற்றவாளிக்கு ஜாமின் வழங்கியதற்கு போலீசார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியான அந்த நபர் ஏற்கனவே திருமணம் ஆனவர். தற்போது சிறுமியை திருமணம் செய்ய முதல் மனைவி ஒப்புக் கொண்டாரா என தெரியவில்லை. அதனால் அவருக்கு ஜாமின் வழங்குவது சரியாக இருக்காது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள குற்றவாளி தரப்பு வழக்கறிஞர், குற்றம்சாட்டப்பவரின் சமூகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோரை திருமணம் செய்வது குற்றம் அல்ல. இருதரப்பு சம்மதத்தின் பேரிலேயே திருமணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.