20 வருடங்களில் இப்படி ஒரு நிலை வந்ததே இல்லை.. மாருதி சுசுகி வாகனங்கள் விற்பனை 36.3% சரிவு
மும்பை: நாட்டின் முன்னணி பயணிகள் வாகன உற்பத்தி நிறுவனமான, மாருதி சுசுகி இந்தியா லிமிடெட், நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை ஜூலை மாதத்தில் 36.3% சரிந்துள்ளது. இவ்வளவு பெரிய சரிவை சுமார் 20 வருடங்களில் முதல் முறையாக சந்தித்துள்ளது அந்த நிறுவனம்.
கடந்த ஆண்டு இதே மாதத்தில், மாருதி சுசுகி நிறுவனம் 154,150 கார்களை விற்பனை செய்த, நிலையில், நடப்பாண்டு ஜூலை மாதம், 98,210 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
பொருளாதாரத்தில் தொடர்ச்சியாக நிலவும் மந்தநிலை மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் விதிமுறைகளை கடுமையாக்கியதைத் தொடர்ந்து, இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
மாருதியைப் பொறுத்தவரை, ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர் மற்றும் வேகன் ஆர் போன்ற சிறந்த விற்பனை கார்களை உள்ளடக்கிய காம்பாக்ட் பிரிவின் விற்பனையை மட்டும் எடுத்துப் பார்த்தால் கூட, கடந்த ஆண்டை ஒப்பிட்டால், இப்போது, கிட்டத்தட்ட 23% குறைந்துள்ளது.
அதே நேரத்தில் பயன்பாட்டு வாகனங்களின் (Utility) விற்பனை 38%க்கும் மேல் சரிந்துள்ளது. 2020 ஏப்ரல் முதல் மாருதி தனது டீசல் வாகனங்களை வாபஸ் பெறுவதாக வெளியிட்ட அறிவிப்பு பயன்பாட்டு வாகன விற்பனையில் சரிவு ஏற்பட காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் சந்தை நோக்கர்கள்.
ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், மாருதி சுசுகியின் நிகர லாபம், கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக, ஏறத்தாழ செங்குத்தான சரிவைக் கண்டுள்ளது. நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிட்டால் 27.3% குறைந்து ரூ.1,435.5 கோடியாக இருந்தது, அதே நேரத்தில் நிறுவனத்தின் நிகர விற்பனை 14.1% குறைந்து ரூ .18,735.2 கோடியாக இருந்தது.
மாருதியின் மொத்த ஏற்றுமதியும் ஜூலை மாதத்தில் 9.4% குறைந்து 9,258 கார்கள் என்ற அளவில் இருந்தது.