ஜான்சி டூ கோரக்பூர் ரயிலின் கழிவறையில் புலம்பெயர்ந்த தொழிலாளரின் உடல்.. 4 நாள் கழித்து கண்டெடுப்பு
மும்பை: ஷ்ராமிக் ரயிலின் கழிப்பறையில் இறந்த புலம்பெயர்ந்த தொழிலாளரின் உடல் 4 நாட்களாக கவனிப்பாறின்றி கிடந்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். பிழைக்க வந்த இடத்தில் வேலையில்லாததால் சொந்த ஊருக்கு செல்லும் போது பசி, பட்டினியாலும் விபத்துகளாலும் இவர்கள் இறக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல ஷ்ராமிக் என்ற சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லாக்டவுன் 5.0.. இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும்.. எது செயல்படும், எது செயல்படாது.. கசிந்த தகவல்!
கோரக்பூர்
ஜான்சியிலிருந்து கோரக்பூர் செல்லும் ஷ்ராமிக் ரயில் கடந்த 27ஆம் தேதி சுத்தம் செய்யப்படுவதற்காக ஜான்சியில் உள்ள ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ஊழியர் ஒருவர் சுத்தம் செய்ய சென்றார். அங்கிருந்த கழிப்பறையில் துர்நாற்றம் வீசியது. அப்போது புலம்பெயர்ந்த தொழிலாளரின் உடல் ஒன்று கிடந்தது. அந்த உடலுக்கு பக்கத்தில் கடந்த 23 ஆம் தேதி காலை 11.40 மணிக்கு ரயில் புறப்படும் என்பதற்கான டிக்கெட் இருந்தது.
மோகன்லால் சர்மா
விசாரணையில் இந்த ரயிலில் பயணம் செய்தவர் மோகன் லால் சர்மா(37). புலம்பெயர்ந்த தொழிலாளியான இவர் மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பஸ்தி மாவட்டமாகும். இவர் மே 21-ஆம் தேதி மும்பையிலிருந்து தனியார் வாகனம் மூலம் ஜான்சிக்கு வந்தார்.
ஜான்சி
அங்கிருந்து 70 கி.மீ. தூரத்தில் உள்ள பஸ்தி மாவட்டத்திற்கு செல்வதற்காக ரயிலில் ஏறியுள்ளார். அந்த ரயில் கோரக்பூரை அடைய 11 மணி நேரம் ஆகும். அதாவது அடுத்த நாள் மே 24 ஆம் தேதி மாலை 4 மணிக்கே அந்த ரயில் கோரக்பூரை அடையும். பின்னர் கோரக்பூரில் பயணிகளை இறக்கிவிட்ட பிறகு மீண்டும் ஜான்சிக்கு இரு மணி நேரம் கழித்து 6.20 மணிக்கு ரயில் புறப்பட்டு அது மே 27ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜான்சியை வந்தடைந்தது.
இறந்து 4 நாட்கள்
அப்போதுதான் அந்த உடல் இருப்பது தெரியவந்தது. அதாவது இறந்து 4 நாட்களாக சர்மாவின் உடல் ரயிலிலேயே இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜான்சி இன்ஸ்பெக்டர் அஞ்சனா வர்மா கூறுகையில் கடந்த 27ஆம் தேதி இரவு, ரயிலில் ஒரு சடலம் கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஷ்ராமிக் ரயிலின் கழிப்பறையில் அந்த உடல் கிடந்தது.
கழிப்பறை
அது சிதிலமடைந்து துர்நாற்றம் வீசியது. முகமெல்லாம் அழுகிவிட்டது. அங்கிருந்த ஆதார் கார்டு மூலம் இறந்தவர் மோகன்லால் சர்மா என தெரியவந்தது. டாய்லெட்டின் கதவு சரி வர தாழிடப்படவில்லை. அவரது பாக்கெட்டிலிருந்து ரூ 27 ஆயிரம் பணத்தை கண்டெடுத்தோம். மும்பையிலிருந்து ஜான்சி வந்த சர்மா கோரக்பூருக்கு சென்றுள்ளார். அங்கு இறங்குவதற்கு முன்னர் கழிப்பறை சென்ற அவர் இறந்திருக்கலாம்.
போன் ஸ்விட்ச் ஆஃப்
அவருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என நாங்கள் சோதனை செய்யவில்லை. ஏனெனில் உடல் இறந்து 4 நாட்களானதால் சோதனை செய்யவில்லை. பொதுவாக ஒருவர் இறந்து 6 மணிநேரத்திற்குள் இந்த சோதனைகள் செய்யப்படவேண்டும் என வர்மா தெரிவித்தார். இறந்த சர்மாவுக்கு பூஜா தேவி என்ற மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர். ரயிலில் ஏறிய போது அவர் தனது மனைவியிடம் பேசியுள்ளார். பின்னர் அவரது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அன்றாடம் இன்னலுக்குள்ளாகிறார்கள்.