நாளைக்கு டெலிவரி.. கொஞ்சம் கூட கவலை இல்லை.. மூச்சு முழுவதும் தேசம்தான்.. உருக வைத்த மினால் போஸ்லே
தேசம் காக்கும் மருத்துவ உபகரணம் வாங்கி தந்து அசத்தி உள்ளார் மினால்!
மும்பை: நாளைக்கு டெலிவரி.. கடைசி நேரம் வரை கொஞ்சமும் அது பற்றிக் கவலையே இல்லை.. மினால் தகாவே போஸ்லேவின் மனசு பூராமே நம்ம மக்களுக்கு ஏதாச்சும் செய்யணும், நாடுதான் முக்கியம் என்ற ஏக்கப் பெருமூச்சுதான்.. கடைசியில் தனது மக்களுக்காக அந்த அரிய விஷயத்தைக் கையில் கொடுத்து விட்டு போய்த்தான் தனது குழந்தையை பெற்றுக் கொண்டார்.. மனசு நிறைந்த நிம்மதியோடு.
நினைச்சுப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.. இதுதான் தாய்மை.. குழந்தையைப் பெறுவது மட்டுமல்ல.. ஈர மனசுதான் உண்மையான தாய்மை.. அந்த மனசு மினாலுக்கு நிறையவே இருக்கு.. இன்று அவரது புண்ணியத்தால்தான் நமது டாக்டர்கள் அதி வேகமாக கொரோனா டெஸ்ட்டுகளை செய்ய முடிகிறது.
உண்மையான பாரதத் தாய் இவர்தான்.. இவருக்குத்தான் நமது மக்கள் நெஞ்சு நிறைந்த நன்றிகளைச் சொல்ல வேண்டும். " அது மிக மிக அவசரம். எனவேதான் அதை சவாலாக எடுத்துக் கொண்டேன். எனது தேசத்துக்கு நான் சேவை செய்ய வேண்டும் என்பது மட்டுமே அப்போது மனதில் ஓடியது" என்று புன்னகையுடன் கூறுகிறார் மினால்.
நிறுவனம்
மினால் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள மைலேப் ஆய்வகத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பிரிவு தலைவர் ஆவார். இந்த நிறுவனம்தான் இந்தியாவின் முதலாவது கொரோனாவைரஸ் சோதனை உபகரணத்தை தயாரித்துள்ளது. இந்த உபகரணம்தான் இன்று இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பை உறுதிசெய்யும் ஒரே சாதனமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிறுவனம்தான் இந்த சாதனத்தை தற்போது நாடு முழுவதும் அனுப்பிக் கொண்டுள்ளது.
உருக்கமான கதை
ஒரு உபகரணத்தின் மூலம் 100 மாதிரிகளை சோதிக்க முடியும். இதற்கான செலவு ரூ. 1200 ஆகும். வெளிநாடுகளிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் உபகரணத்தை விட இது வெகு குறைவான தொகையாகும். ஆனால் இதன் பின்னர் ஒரு உருக்கமான கதை மறைந்திருக்கிறது. இதை நடிகை சோனி ரஸ்தான் வெளி உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார். அதில்தான் மினாலின் தியாக மனசு நமக்கு தெரிய வருகிறது.
கர்ப்பிணி
மினால் தலைமையிலான குழுவினர்தான் இந்த உபகரணத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளனர். இதற்கு Patho Detect என்று பெயர். மினால் கர்ப்பிணியாக இருந்த சமயத்தில், கடந்த பிப்ரவரி மாதம் நிலையில் தான் விடுமுறையில் செல்லவிருந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்த உபகரணத்தை தயாரித்துக் கொடுக்க வேண்டி பணி வந்து சேர்ந்தது. இதையடுத்து தானே நேரடியாக களம் இறங்கி தனது குழுவினரோடு இணைந்து இந்த உபகரணத்தை வெற்றிகரமாக முடிக்கும் பணியில் குதித்தார் மினால்.
பிரசவம்
மார்ச் 18ம் தேதி ஒரு வழியாக சாதனத்தை ரெடி செய்து தேசிய வைரலாஜி நிறுவனத்தில் சமர்ப்பித்தார் மினால். அதற்கு அடுத்த நாள் அதாவது மார்ச் 19ம் தேதி அவருக்கு பிரசவம் நடந்தது. அழகான மகளைப் பெற்றெடுத்தார் மினால்.. நினைச்சுக் கூட பார்க்க முடியவில்லை.. அதாவது பிரசவத்திற்கு முதல் நாள் வரை அவர் நாட்டு மக்களை மனதில் வைத்து உழைத்துள்ளார்.. என்ன ஒரு வலிமையான பெண் இவர்.!
பேட்டி
இதுகுறித்து பிபிசி சார்பில் மினாலிடம் கேட்டபோது, "உபகரணம் அவசரமானது. எனவேதான் அதை சவாலாக எடுத்துக் கொண்டேன். நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும். அதுதான் முதலில் " என்று புன்னகை மாறாமல் கூறுகிறார் மினால். இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த இன்னொரு பேட்டியில், "நாம் கோவிட்19 சோதனை உபகரணத்தில் ஒரு சாதனை செய்துள்ளோம். பிற உபகரணங்கள் மூலம் சோதனை நடத்தினால் முடிவு தெரிய 6 முதல் 7 மணி நேரமாகும். ஆனால் நமது உபகரணத்தில் இதற்கான கால அளவு வெறும் இரண்டரை மணி நேரம்தான். எங்களது அனுபவத்தால் இதை சாதிக்க முடிந்தது" என்றார்
வலிகள்
மினாலுக்குப் பின்னர் மறைந்திருந்த இந்த கடும் முயற்சிகளும், வலிகளும் ஒட்டு மொத்த இந்தியாவையும் நெகிழ வைத்துள்ளது. பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா இதுகுறித்து கூறுகையில், திருமதி போஸ்லே.. நீங்கள் உபகரணத்தையும், அழகான மகளையும் மட்டும் பெற்றுக் கொடுக்கவில்லை. இந்த நாட்டுக்கே மிகப் பெரிய நம்பிக்கையை பெற்றுக் கொடுத்துள்ளீர்கள். நாங்கள் எழுந்து நின்று உங்களுக்கு சல்யூட் செய்கிறோம்" என்று உருக்கமாக கூறியுள்ளார்.
ஒரே சிந்தனை
மினால் போஸ்லேவின் உபகரணம் அத்தனை இந்தியர்களையும் காக்க வேண்டும். .அவர் பட்ட பாடு, சிந்திய வேர்வை வீணாகக் கூடாது.. இந்தியா இந்த கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு நலம் பெற வேண்டும்.. இதுதான் நமது மனசில் இப்போது எழுந்து நிற்கிற ஒரே சிந்தனை.