கர்நாடகத்தில் பரபரப்பு.. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதா.? மும்பையில் எம்எல்ஏ நாகராஜ்
மும்பை: கர்நாடக அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் ஏதேனும் பரபரப்பான அல்லது குழப்பான சம்பவங்கள் நடந்து, பார்ப்பவர்களையும் தலை சுற்ற வைக்கிறது.
நேற்று இரவு காங்கிரஸ் கட்சியிலேயே தொடர போவதாக அறிவித்த எம்எல்ஏ எம்.டி.பி நாகராஜ், தற்போது திடீரென மீண்டும் மும்பை சென்றுள்ளார். அவரது இந்த திடீர் மும்பை பயணம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுவும் பாஜக தலைவர் ஆர்.அசோக்குடன் மும்பை விமான நிலையத்தில் அவர் இருக்கும் காட்சி வெளியகியுள்ளது. இதன் மூலம் நாகராஜ் நேற்று அறிவித்த நிலைப்படி தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற்று காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தொடர போகிறாரா, அல்லது வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக பாஜக வசம் சென்று விட்டாரா என்பது புரியாத புதிராக உள்ளது.
நாளை கர்நாடக சட்டமன்றம் மீண்டும் கூட உள்ள நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு, காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு தயாராகி வருகிறது. இந்நிலையில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் ஒருவரான எம்.டி.பி.நாகராஜ் ஒருவழியாக சமாதானமாகி, காங்கிரஸ் கட்சியிலேயே இருக்க நேற்று சம்மதித்தார்.
காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவின் இல்லத்தில் வைத்து, அதிருப்தி எம்எல்ஏவான எம்.டி.பி.நாகராஜை கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று நேரில் சந்தித்து பேசினார். சித்தராமையாவின் வீட்டில் நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர் ஜமீர் அகமது கான் உடன் இருந்தார். இந்த சந்திப்பின் போது மூத்த தலைவர்கள் அனைவரும் நாகராஜை சமாதானப்படுத்தியதாக தெரிகிறது.
பின்னர் மூத்த காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்து இயங்க உள்ளதாக, எம்எல்ஏ எம்.டி.பி.நாகராஜ் அறிவித்திருந்தார். தலைவர்கள் அனைவரும் ஒருசேர காங்கிரஸ் கட்சியிலேயே தம்மை தொடருமாறு கோரியதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியிருந்தார்.
இதனையடுத்து காங்கிரஸ் தரப்பு உற்சாகத்தில் இருந்தது. நாகராஜை சமாதானப்படுத்தியது போல மேலும் பல எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தி விடலாம் என கனவு கண்டு கொண்டிருக்கிறது.
நேற்று காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியதாக கூறப்பட்ட நிலையில் அதிருப்தி எம்எல்ஏ நாகராஜ், பாஜக நிர்வாகி அசோக்குடன் தற்போது மும்பை சென்றுள்ள சம்பவம் கர்நாடக அரசியலில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.