முகநூலில் அறிமுகமான நடிகை கொலை.. உடலை சூட்கேசில் அடைத்து புதரில் வீசிய கல்லூரி மாணவர் கைது!
மும்பையில் மாடல் அழகியைக் கொலை செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
மும்பை: மும்பையில் முகநூல் மூலம் அறிமுகமான துணை நடிகையை அடித்துக் கொலை செய்து, உடலை சூட்கேசில் அடைத்து புதரில் வீசிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை கால்டாக்சி டிரைவர் ஒருவர், தன் காரில் பயணம் செய்த இளைஞரின் நடவடிக்கைகள் சந்தேகம் அளிக்கும் விதத்தில் இருப்பதாக போலீசாருக்குத் தகவல் அளித்தார். அதாவது, 'தனது காரில் பயணம் செய்த சையத் என்ற இளைஞர், மும்பை விமான நிலையம் செல்ல வேண்டும் என கையில் பெரிய சூட்கேசுடன் வந்ததாகவும், ஆனால் பாதி வழியில் அப்பெட்டியை புதரில் வீசி விட்டு அவர் இறங்கிச் சென்று விட்டதாகவும்’ அவர் போலீசிடம் தெரிவித்திருந்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், டிரைவர் குறிப்பிட்ட மலாடு பகுதியில் புதர் நிறைந்த இடத்தில் இருந்து சூட்கேஸ் ஒன்றை மீட்டனர். அதில், இளம்பெண் ஒருவரின் உடல் படுக்கை விரிப்பால் சுற்றப்பட்டு, முகம் கயிற்றால் நெரிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து அந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், டிரைவர் கூறியது போன்று இளைஞர் ஒருவர் காரில் இருந்து இருந்து இறங்கி சூட்கேஸை தூக்கி வீசிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. அதோடு, அந்த இளைஞர் சிறிது தூரம் நடந்து சென்று ஆட்டோவில் ஏறியதும், பின்னர் சிறிது நேரத்தில் அதில் இருந்து இறங்கி மீண்டும் மற்றொரு காரில் ஏறிச் செல்வதும் அங்கிருந்த சாலை கண்காணிப்பு கேமராக் காட்சிகள் மூலம் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து போலீசாரின் தொடர் விசாரணையில் சம்பந்தப்பட்ட இளைஞர் 19 வயதான கல்லூரி மாணவர் முசாமில் சையத் என்பது உறுதியானது. அந்தேரி பகுதியில் வைத்து சையத் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் மாடல் அழகி மான்சி தீக்சித் (20 ) என்பது தெரியவந்தது. இந்திப் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ள மான்சி, குறும்படங்களிலும் நடித்துள்ளார். சமூகவலைதளம் மூலமாக சையத்தும், மான்சியும் நண்பர்களாகியுள்ளனர்.
சம்பவத்தன்று சையத்தை நேரில் சந்திப்பதற்காக அந்தேரியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் மான்சி. அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மான்சியை இரும்பு நாற்காலியால் சையத் தாக்கியுள்ளார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது முகத்தை கயிற்றாலும், உடலை படுக்கை விரிப்பாலும் சுற்றி சூட்கேசில் அடைத்து மலாடு பகுதியில் சையத் வீசி சென்றுள்ளார்.
போலீசாரின் விசாரணையில் மான்சியை கொலை செய்ததை ஒப்புக் கொண்ட சையத், கொலைக்கான காரணம் குறித்து தெரிவிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.