மேலும் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மும்பை செல்கிறார்கள்.. அதிருப்தி காங். எம்எல்ஏ பரபரப்பு பேட்டி
மும்பை: ஏற்கனவே, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், இன்று மேலும் சிலர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு மும்பை செல்ல உள்ளதாக எம்எல்ஏ ஒருவர் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக அரசியல் தற்போது மும்பைக்கு ஷிப்ட் ஆகி உள்ளது என்று சொல்லலாம். அதிருப்தி, எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரான டி.கே.சிவகுமார் இன்று விரைந்தார். ஆனால் அவரை உள்ளே அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதற்கு அடுத்தபடியாக, கர்நாடக முதல்வர் குமாரசாமியும், கூட, இந்த ஹோட்டலுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு அதிருப்தியாளர்களை வளைக்க, ஆளுங்கட்சி தரப்பில் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹோட்டலில் தங்கியுள்ள அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஜாரக்கிகோலி இன்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், எந்த காரணத்தைக் கொண்டும் எங்களது ராஜினாமா முடிவில் மாற்றம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இன்று மேலும் 4 எம்எல்ஏக்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு மும்பை வர உள்ளனர்.
எந்த காரணத்தைக் கொண்டும் சிவகுமாரை சந்திக்க நாங்கள் தயாராக இல்லை. பாஜக எங்களை இயக்குவதாக கூறுவதில் உண்மையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். ரமேஷ் அளித்துள்ள பேட்டியை வைத்துப் பார்க்கும்போது, முடிந்துவிட்டது என்று நினைக்கும் போது புதிதாக பூதம் கிளம்பிய கதையாக மாறிவிட்டது கர்நாடக அரசியல் நிலைமை.