கொரோனா தடுப்பூசி காலி.. ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட மையங்கள் மூடல்.. பெரும் சிக்கலில் மகாராஷ்டிரா
மும்பை: கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மும்பை மற்றும் புனே பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக மராட்டிய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மராட்டியத்தில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ளது. அங்குத் தினசரி வைரஸ் பாதிப்பு 55 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதனால் அம்மாநில அரசு மீண்டும் ஊரடங்கு உத்தரவுகளைக் கடுமையாக்கியுள்ளது. இரவு நேரங்களிலும் மற்றும், வார இறுதி நாட்களிலும் முழு லாக்டவுனை அறிவித்துள்ளது. மேலும், மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தடுப்பூசி தேவை
இந்தச் சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி மட்டுமே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் தாக்கரே அரசு அதிகரித்துள்ளது. இருப்பினும், மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் மத்திய அரசு விரைவில் தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என்றும் மராட்டிய அரசு ஏற்கனவே மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது.
தடுப்பூசி மையங்கள் மூடல்
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி காலியாகியுள்ளதால் மும்பையில் 26 தடுப்பூசி மையங்களை அம்மாநில அரசு மூடியுள்ளது. கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக புனேவிலும் 100க்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே ட்வீட் செய்துள்ளார். இதன் காரணமாக மராட்டிய மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா குற்றச்சாட்டு
மகாராஷ்டிராவை மத்திய அரசு பாகுபாட்டுடன் நடத்துவதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோபே குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மகாராஷ்டிராவைப் போல அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலத்திற்கு வாரத்திற்கு 40 லட்சம் தடுப்பூசி டோஸ்களும், மாதத்திற்கு 1.6 கோடி தடுப்பூசி டோஸ்களும் தேவை. குஜராத்தைவிட இங்கு மக்கள் தொகை இரண்டு மடங்கு அதிகம். ஆனால், இரண்டு மாநிலத்திற்கும் ஒரு கோடி தடுப்பூசியை மத்திய அரசு அனுப்பியுள்ளது எந்த விதத்தில் நியாம்? என்று எவர் கேள்வி எழுப்பினார்.
அடுக்கடுக்கான கேள்வி
தொடர்ந்து பேசிய ராஜேஷ் தோபே, மத்திய அரசு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசி அளவை 7 லட்சத்தில் இருந்து 17 லட்சம் அதிகரித்துள்ளது. ஆனால், இது எங்களுக்கு போதாது. அடுத்த ஒரு வாரத்திற்கு மட்டும் எங்களுக்குக் குறைந்தபட்சம் 40 லட்சம் தடுப்பூசிகள் தேவை, இன்று பிரதமர் மோடியுடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திலும் இது குறித்து கேள்வி எழுப்பவுள்ளோம். இதுதவிர ரெமெடிசிவிர், ஆக்ஸிஜன் சப்ளே, வென்டிலேட்டர் ஆகியவை குறித்தும் கேள்வி எழுப்புவோம் என்று மராட்டியச் சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்தார்.
ஹர்ஷ் வர்தன் குற்றச்சாட்டு
முன்னதாக இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், மராட்டிய அரசு பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதால் தற்போது நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. இதன் காரணமாக தற்போது ஒட்டுமொத்த தேசமும் வைரசுக்கு எதிரான போரில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அரசியலாக்க விரும்பவில்லை
இதற்குப் பதிலளித்த ராஜேஷ் தோபே, இது மத்திய-மாநில அரசுக்குளுக்கு இடையேயான மோதல் இல்லை என்றும் இதை அரசியலாக்கத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் யாரையும் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை என்றும் கூறிய அவர், தற்போதுள்ள வயது கட்டுப்பாட்டை நீக்கி, 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.