மாருதி சுசுகி நிறுவனத்தையும் விடாத ஆட்டோமொபைல் தொழில் வீழ்ச்சி.. பணியிழந்த தற்காலிக ஊழியர்கள்
மும்பை: ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மந்தநிலையால் நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (எம்.எஸ்.ஐ.எல்) நிறுவனத்தில் பணியாற்றிய, 3,000 க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.
எம்.எஸ்.ஐ.எல் தலைவர் ஆர்.சி.பார்கவா, பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் இதுபற்றி கூறியிருப்பதாவது: தற்காலிக தொழிலாளர்களின் ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படவில்லை, அதே நேரத்தில் நிரந்தர தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படவில்லை.
இது வணிகத்தின் ஒரு பகுதிதான். தேவை அதிகரிக்கும் போது, அதிக ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள், தேவை குறைந்தால் பணியாளர்கள் குறைக்கப்படுவார்கள்.
தற்காலிக பணியாளர்கள்
தற்போதைய விற்பனை சரிவு மற்றும் உற்பத்தி குறைப்பு, மாருதியில் பணி நீக்கத்திற்கு வழிவகுத்ததா என்ற கேள்விக்கு பார்கவா பதிலளிக்கையில். "மாருதி சுசுகியில் சுமார் 3,000 தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்," என்று அவர் தெரிவித்தார்.
பல துறைகள்
விற்பனை, சேவை, காப்பீடு, உரிமம், நிதி, பாகங்கள், ஓட்டுநர்கள், பெட்ரோல் பம்புகள், போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் ஆட்டோமொபைல் துறை பாதிப்பை ஏற்படுத்தும். இந்த துறைகளில் வேலைவாய்ப்பை ஆட்டோமொபைல்துறைதான் உருவாக்குகிறது. குறைவான வாகன விற்பனை பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை பாதிக்கும்.
வளரும் வாய்ப்பு
இருப்பினும், இந்த நிதியாண்டின் மூன்றாவது அல்லது நான்காம் காலாண்டில் இருந்து நேர்மறையான வளர்ச்சி தொடங்கும் வாய்ப்பு உள்ளது. ஓரளவு அடிப்படை மாற்றம் காரணமாக 2021 ஆம் நிதியாண்டில் வலுவான முன்னேற்றத்தை காணலாம் என்று நம்புகிறேன். அதற்குள் பிஎஸ் 6ம் நிலைக்கு மாற்றம் செய்யும் பணிகளும் முடிவடையும்.
திருவிழாக் காலம்
வரவிருக்கும் திருவிழா காலம், நல்ல பருவமழை காரணமாக, கிராமப்புறங்களில் கார் விற்பனை அதிகரிக்கும். அரசும் சாதகமான நடவடிக்கைகளை எடுத்தால் அது நிலைமையை மேம்படுத்த உதவும். ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்பு குறித்து முடிவு செய்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்.
வரி சலுகை தேவை
பசுமை கார்களுக்கு ஜிஎஸ்டி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஹைப்ரிட் வாகனங்களுக்கும் வரி குறைப்பு செய்ய வேண்டும். சி.என்.ஜி வாகனங்களுக்கும் வரி குறைப்பு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.