தனியாக வந்த பெண் பயணியிடம் அத்துமீறல்... சுய இன்பம் அனுபவித்த ஓலா டிரைவர் கைது
மும்பை ஓலா டாக்சியில் தனியாக பயணம் செய்த பெண் பயணியிடம் அத்துமீறிய டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை: நவி மும்பையில் இருந்து குர்லா சென்ற அந்தப்பெண் அதிர்ச்சிகரமான ஒரு சம்பவத்தை சந்தித்தார். ஓலா டாக்ஸியில் பயணம் செய்த போது அந்த டாக்ஸி டிரைவரின் பார்வையே சரியில்லாமல்தான் இருந்தது. அவசரத்திற்கு வேறு வழியில்லாமல் அதில் ஏறினார். சிக்னலில் கார் நின்ற போது கண்ணாடி வழியாக அந்தப் பெண்ணை பார்த்துக்கொண்டே சுய இன்பத்தில் ஈடுபட்டார்.
தனியாக பயணித்த போது அத்துமீறிய டிரைவரின் செயலால் அதிர்ச்சியடைந்த அந்தப்பெண் உடனடியாக எமர்ஜென்சி பட்டனை அழுத்தியதோடு புகார் தெரிவிக்கவே வேறு டாக்ஸியை அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை டுவிட்டரில் பதிவிட்டார்.
ஓலா டிரைவரின் செயலினால் தான் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் அந்த சம்பவத்தில் இருந்து அவமான உணர்வில் இருந்தும் விடுமான தனக்கு 24 மணிநேரம் தேவைப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த பதிவைப் பார்த்த ஓலா செய்தித் தொடர்பாளர் தங்கள் ஓட்டுநரின் செயலை கடுமையாக கண்டித்ததாகவும் அந்த பெண்ணிடம் புகாரைப் பெற்று டிரைவரை பணிநீக்கம் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார். பாதுகாப்பு உறுதிக்குழுவினர் தொடர்பு கொண்டு அந்த பெண்ணிற்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறியுள்ளனர்.
அந்த பெண்ணின் ட்விட்டர் பதிவை பார்த்த மும்பை போலீசார் அந்த பெண்ணிடம் தொடர்பு கொண்டு புகார் பெற்று அந்த ஓலா டிரைவரை கைது செய்துள்ளனர். அவர் மீது இந்திய தண்டனைச்சட்டம் 509 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஓலா கால் டாக்ஸி டிரைவர்கள் அத்துமீறுவது இது முதல்முறையல்ல. கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று பெண் பயணியிடம் சண்டை போட்ட டிரைவர் அடித்து பிரச்சினையில் சிக்கினார். இதே போல 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவில் பெண் பயணியிடம் தவறாக நடக்க முயன்றதாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.