மும்பை டாக்டர் பாயல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் - பகீர் கிளப்பும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்
மும்பை: சாதிய ரீதியான ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட மும்பை மருத்துவக்கல்லூரி மாணவி பாயல் தாத்வி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அறிக்கை தெரிவித்துள்ளது. மாணவியின் கழுத்தில் இருந்த காயங்களும் தடயங்களுமே இந்த சந்தேகம் எழுவதற்கு சாட்சியங்களாக இருந்துள்ளன.
மருத்துவக்கல்லூரியிலும், ஐஐடி போன்ற உயர்கல்வி பயிலும் இடங்களிலும் சாதிய ரீதியான வன்மங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு பலியாவது ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான்.
திருப்பூர் டாக்டர் சரவணன் டெல்லியில் மேற்படிப்புக்காக சென்ற இடத்தில் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்களின் மரணம் மர்மமாகவே நிகழ்ந்துள்ளது. அதுபோலவே பாயலின் மரணம் தற்கொலை என்று கூறப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை கொலையாக இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
புத்திசாலி பெண்
பாயலின் மரணம் அவரது பெற்றோர், கணவன்,சகோதரன் ஆகிய மூவரையும் உடைத்து போட்டுள்ளது. என் மகள் உறுதியானவள், தைரியசாலி என்று கூறும் பெற்றோர், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாயல் துன்புறுத்தப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். ப்ளஸ் 2 முடித்த உடன் மிரஜ் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்த பாயல், மேல் படிப்புக்காக நாயர் மருத்துவமனையில் சேர்ந்தார்.
சாதிய வன்மம்
ஹாஸ்டலில் ஹேமா, மெஹருடன் தங்கியிருந்த பாயலை இருவருமே சாதிய வன்மத்துடன் குத்தி கிழித்துள்ளனர். வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி சாதிய ரீதியாக தாக்கினர். பாத்ரூம் போய்விட்டு வந்து பாயலின் போர்வையில் துடைத்தனர். சரியான நேரத்திற்கு சாப்பிட விடாமல் தடுத்தனர்.
கொடுமை செய்த சீனியர்கள்
படிக்காத பாமரர்கள் கூட இப்படி யோசித்திருக்க மாட்டார்கள். அடித்தட்டு சமுதாயத்தில் இருந்து மருத்துவ மேற்படிப்பு படிக்க வந்த ஒரு பெண்ணை போகும் இடங்களில் எல்லாம் விரட்டி விரட்டி கொடுமை செய்தனர். கணவனை பார்க்க விடாமல் தடுத்தனர். புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த அம்மாவையும் காண விடாமல் தடுத்துள்ளனர். இட ஒதுக்கீட்டில் வந்தவர் எப்படி பிரசவம் பார்க்கலாம் என்றும் கேட்டுள்ளனர்.
கண்டு கொள்ளாத நிர்வாகம்
தனக்கு நேர்ந்த கொடுமைகளை பெற்றோரிடமும், கணவரிடமும் கூறி அழுத பாயலுக்கு அவர்கள் ஆறுதல் வார்த்தை மட்டுமே கூற முடிந்தது. கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்து அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. சாதிய வன்மத்தோடு நடத்தி என் மனைவியின் மரணத்திற்கு காரணமாகிவிட்டனர். மூவரும் தண்டிக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற செயல்களை செய்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்கின்றார் பாயலின் கணவர் சல்மான் தாத்வி.
சகோதரரின் வேதனை
பாயலின் சகோதரர் ரிதேஷ் மாற்றுத்திறனாளி, அவருக்காகவே மருத்துவம் படித்தார் பாயல். தங்கையின் மரணம் அதிகம் பாதித்துள்ளது. பாயலுக்கு நடைபெறும் கொடுமை பற்றி டீனிடம் பலமுறை கூற முயன்றும் காது கொடுத்தே கேட்கவில்லை என்கிறார். பாயல் மட்டுமே எங்களின் ஒரே நம்பிக்கையாக இருந்தாள். அவளது மரணத்திற்கு காரணமானவர்களின் மருத்துவ பட்டத்தை பறிக்க வேண்டும் என்று கொந்தளிப்போடு கூறியுள்ளார்.
தற்கொலையல்ல
கடந்த மே 22ஆம் தேதி தூக்குப்போட்ட நிலையில் பாயலின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது மரணத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பேசிய பின்னர்தான் நாடு முழுவதும் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்தே மூன்று சீனியர் மருத்துவர்களை கைது செய்துள்ளனர். ராகிங், வன்கொடுமை வழக்கு போடப்பட்டுள்ளது. மூன்று பேரையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
கழுத்தில் காயம்
பாயலின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது பகீர் கிளப்புகிறது. கொலை செய்யப்பட்டதற்கான தடையங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூக்கு போட்டுக்கொண்டால் கழுத்தில் ஏற்படும் அழுத்தத்தை விட வேறு விதமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.
கொலையாக இருக்கலாம்
மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வாதாடிய பாயலின் வழக்கறிஞர், இது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பியுள்ளார். பாயலை வேறு இடத்தில் கொன்று விட்டு தடயத்தை அழித்து விட்டு மருத்துவக்கல்லூரி விடுதிக்குக் கொண்டு வந்துள்ளதாக பாயலின் வக்கீல் தெரிவித்துள்ளார்.
தடயம் அழிப்பு
பாயலின் உடலில் உள்ள காயங்களை வைத்து பார்க்கும் போது இது கொலையாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றே அவரது குடும்பத்தினரும் கூறியுள்ளனர். காவல்துறையினர் 14 நாட்களுக்காவது தீர விசாரித்து குற்றவாளிகள் தப்பிவிடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
ஆனால் கைது செய்யப்பட்ட மூன்று பேரின் வக்கீலும் இதனை மறுத்துள்ளார். பாயல் என்ன சாதி என்றே அவர்களுக்குத் தெரியாது என்று வாதிட்டு வருகிறார். பாயலின் மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற சாதிய வன்மம் ஒழியும்.