மும்பை பயங்கரம்: ரூ. 15 லட்சம் பணத்துக்காக அக்கவுண்டண்ட் கொலை - தலைமறைவான டிரைவர் கைது
மும்பையில் கார் டிரைவர் ஒருவர் 15 லட்ச ரூபாய் பணத்திற்காக தன்னுடன் வேலை செய்த அக்கவுண்டண்ட்டை கொன்று வீசியுள்ளார். கொலையாளியை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மும்பை: பணத்திற்கான நடக்கும் கொலைகள் தற்போது அதிகரித்து வருகிறது. மும்பையில் கார் டிரைவர் ஒருவர் 15 லட்ச ரூபாய் பணத்திற்காக தன்னுடன் வேலை செய்த அக்கவுண்டண்ட்டை கொன்று வீசியுள்ளார். கொலையாளியை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரகுராம் 73, நேவி மும்பையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர், தெற்கு மும்பையில் உள்ள ஷிப்பிங் கம்பெனியில் அக்கவுண்டட் ஆக வேலை செய்தார். கடந்த வாரம் வாடிக்கையாளரிடம் வசூல் செய்த 15 லட்சம் ரூபாயுடன் மாயமாகிவிட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மும்பை போலீசார் ரகுராமைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். ரகுராம் குடும்பத்தைப் பற்றியும் எத்தனை ஆண்டுகளாக அவர் வேலை செய்கிறார் என்றும் விசாரணை நடத்தியதில் பல விசயங்கள் தெரியவந்தன.
கள்ளக்காதலுக்காக கொலை - ஒரு செல்லில் 2 சிம்... மூன்றாவதுக்கு ஆசைப்பட்ட கணவனின் கழுத்தறுத்த மனைவி
ரகுராம் கடந்த 30 ஆண்டுகாலமாக அந்த நிறுவனத்தில் அக்கவுண்டட் ஆக வேலை செய்து வந்தார். மே 13ஆம் தேதியன்று 15 லட்சம் ரூபாயை போர்வெலி பகுதியில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு தருவதற்காக கம்பெனி காரில் சென்ற அவர் திடீரென மாயமானார். வாடிக்கையாருக்கு அவர் பணத்தை கொண்டு போய் கொடுக்கவில்லை. காரை ஓட்டிச்சென்ற டிரைவர் ராகுல் எந்த தகவலையும் சொல்லவில்லை.
அடுத்த இரண்டு தினங்களில் சொந்த ஊரில் வேலை இருப்பதாக கூறிய டிரைவர் ராகுல், வேலையை விட்டு திடீரென நின்று விட்டான். உத்தரபிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்கு கிளம்பிவிட்டான். இந்த தகவலும் போலீசுக்கு தெரியவரவே மும்பை போலீசாரின் சந்தேகம் டிரைவர் மேல் விழுந்தது. உத்தரபிரதேசத்திற்கு விரைந்த போலீசார், பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் டிரைவர் ராகுலை கைது செய்து தங்கள் பாணியில் விசாரித்தனர்.
அடி தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் உண்மையை ஒப்புக்கொண்டான் ராகுல். ரகுராமை கொன்று பணத்தை திருடியதை ஒத்துக்கொண்ட ராகுல், எப்படி கொலை செய்து என்று நடித்துக்காட்டினான்.
ராகுல் அந்த ஷிப்பிங் கம்பெனிக்கு வேலைக்கு சேர்ந்து 3 ஆண்டுகள்தான் ஆகிறது. ரகுராமுடன் நல்ல பழக்கம் இருந்தது. 13ஆம் தேதி பணத்தை எடுத்துக்கொண்டு காரில் சென்ற போது, ஓரிடத்தில் நிறுத்தி விட்டு வாடிக்கையாளரிடம் வழி கேட்டுக்கொண்டிருந்தார். 15 லட்சம் ரூபாய் அவரிடம் இருப்பதை அறிந்து கொல்ல திட்டம் போட்டான். பின் சீட்டுக்கு வந்து பெல்டினால் ரகுராமின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளான். கம்பெனிக்கு வந்து சொந்த ஊருக்கு உடனடியாக செல்வதாக கூறி ராஜினாமா செய்து விட்டு ரயில் ஏறிவிட்டான்.
ரகுராம் மாயமானதற்கு அடுத்த நாளே வேலையை ராஜினாமா செய்து விட்டு ராகுலும் சொந்த ஊருக்கு கிளம்பியது சந்தேகத்தை ஏற்படுத்தியது. போலீஸ் சந்தேகப்பட்டது போல டிரைவரே கொன்று விட்டு நாடகமாடியிருக்கிறான். ராகுல் மீது, கொலை, கொலையை மறைத்தல், பணம் திருட்டு ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். 15 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.